கர்ப்பிணிகள், சுகர், பி.பி. நோயாளிகளுக்கு 2 மாதங்களுக்கான மாத்திரைகள் வழங்கப்படும்: தமிழக அரசு 'நச்'
சென்னை: மருந்து, மாத்திரைகள் தேவைப்படுவோருக்கு அடுத்த 2 மாதங்களுக்கு, இந்த மருந்துகள் கொடுக்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா நோய் தடுப்பு மற்றும், லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நல்வாழ்வு தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, அரசு வெளியிட்ட அறிவிப்பு:
கர்ப்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், காசநோய் மற்றும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருந்துகளை அரசு மருத்துவமனைகளில் இருந்து பெற வசதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இதற்காக அலைந்து வந்து வாங்க வேண்டாம். அவர்களுக்கு அடுத்த, இரண்டு மாதங்களுக்கு மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். முதியோர், பெண்கள் போன்றோர் தங்களுக்கு மருத்துவ உதவி தேவை என்றால் 108 தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜோமோட்டோ, ஸ்விக்கி, உபெர் ஈட்ஸ் மூலம் சமைத்த உணவை வழங்குவதற்கான தடை தொடரும். ஆனால் மூத்த குடிமக்கள் மற்றும் சமைக்க முடியாதவர்கள், சமைத்த உணவை உணவு வழங்குநர்களிடமிருந்து பெறுகிறார்கள். இது அனுமதிக்கப்படும். அத்தகைய சேவைகளில் ஈடுபடுபவர்கள் பேட்ஜ் அணிய வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களின் வழங்கல் மற்றும் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, சென்னை கார்ப்பரேஷனிலும் மற்ற அனைத்து மாவட்டங்களின் மாவட்ட தலைமையகத்திலும் ஒரு உதவி மையம் அமைக்கப்படும்.
தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் தினசரி / வாராந்திர / மாதாந்திர வட்டியை அசல் தொகையுடன் வசூலிக்கின்றன. மறு உத்தரவு வரும் வரை இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.