சபரிமலை கோவிலுக்குப் பெண்கள் போகக் கூடாது.. பிரேமலதா விஜயகாந்த் சூசகம்!
சென்னை: சபரிமலை கோவிலுக்கு என்று ஒரு பாலிசி உள்ளது. அதை அனைவரும் மதிக்க வேண்டும். காலம் காலமாக உள்ள பழக்கத்தை உடனடியாக உடைக்க முடியாது என்று தேமுதிக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக தொடங்கியது முதல் பதவி எதையும் வகிக்காமலேயே கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் பிரேலமதா. தற்போது அவருக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார் பிரேமலதா விஜயகாந்த்.
தனது பேட்டியின்போது சபரிமலை விவகாரம் குறித்தும், தமிழக இடைத் தேர்தல், பொதுத் தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார் பிரேமலதா. அதிலிருந்து:
சபரிமலை, சனி ஷிங்கனாப்பூர் கோயில் பெண் போராளி திருப்தி தேசாய் கைது
பாலிசியை மதிக்க வேண்டும்
சாதி, மதம், மொழியைத் தாண்டி அனைவரும் மனிதகுலம் என்று உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். இதைத்தான் கேப்டனும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு பாலிசி இருக்கும். அது இந்து மதமாக இருந்தாலும் சரி, முஸ்லீம் மதமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ மதமாக இருந்தாலும் சரி. அதை நாம் மதிக்க வேண்டும்.
திடீரென உடைக்க முடியாது
ஒவ்வொரு மதத்திற்கும், அதன் வழிபாட்டுத் தலத்துக்கும் ஒரு பாலிசி இருக்கும். அதை திடீரென உடைத்து விட முடியாது. சபரிமலை கோவிலும் அப்படித்தான். அந்தக் கோவிலுக்கென்று உள்ள பாலிசியை மதிக்க வேண்டும். அதுதான் கேப்டனின் கருத்தும் ஆகும்.
மதக் கலவரம் ஏற்படுத்த முயற்சி
எப்போது சாதி, மதத்தை வைத்துத்தான் கலவரத்தை ஏற்படுத்தப் பார்ப்பார்கள். எனவே மக்களும், பக்தர்களும் இதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அனைவரும் மனிதகுலத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் மாற்றம் வரும்
தமிழகத்தில் விரைவில் மாற்றம் வரும் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். அந்த மாற்றம் வர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தில் நல்லதொரு ஆட்சி, நிலையான ஆட்சி அமைய வேண்டும். இது நடைபெறும் என்று நம்புகிறோம்.
தேமுதிக ஆட்சி
வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும் என்று சொல்கிறார்கள். அத்தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று கேப்டன் தலைமையில் நல்லாட்சி மலரும். இன்று ஜெயலலிதாவும் இல்லை, கருணாநிதியும் இல்லை. ஆட்சி செய்தது, ஆட்சி செய்யும் கட்சி ஆகியவை துண்டு துண்டாக கிடக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலைக் கூட நடத்த முடியாத ஆளுங்கட்சி உள்ளது. எனவே தேமுதிக நிச்சயம் ஆட்சியமைக்கும், கேப்டன் தலைமையில் ஆட்சி மலரும்
குடும்ப அரசியல் அல்ல
குடும்ப அரசியல் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்களும் சொல்லிக் கொண்டுதான் உள்ளீர்கள். ஆனால் நான் 14 வருடமாக கட்சிக்காக கடுமையாக உழைத்து இப்போதுதான் பதவி தரப்பட்டுள்ளேன். கேப்டனிடம் பாராட்டும், பொறுப்பும் வாங்குவது அவ்வளவு எளிதானதல்ல. கடுமையாக உழைத்தால்தான் அவர் பாராட்டுவார், பொறுப்பும் தருவார். எனது கடின உழைப்பால்தான் இந்தப் பொறுப்பு கிடைத்துள்ளது என்றார் பிரேமலதா.