சசிகலாவை புகழ்ந்து, எடப்பாடியாரை விமர்சித்துவிட்டு.. சீட்டு மட்டும் இவ்வளவு கேட்கிறதே தேமுதிக
சென்னை: அதிமுகவிடம் 41 தொகுதிகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த தேர்தல் ஒவ்வொரு கட்சிக்கும் முக்கியமான தேர்தல் என்பதால் பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வியூகங்கள் என களை கட்டி வருகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணி என்பது கிட்டதட்ட முடிவாகிவிட்ட ஒன்று. இன்னும் தொகுதி பங்கீடுதான் செய்யப்படவில்லை. அது போல் அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா, நீதி கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.
பாமக
இதில் தேமுதிகவும் பாமகவும் என்ன செய்யும் என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. பாமக திமுகவில் சேர வாய்ப்பே இல்லை. அது போல் வன்னியர் இடஒதுக்கீடு குறித்து அதிமுக அரசுக்கு பாமக அழுத்தம் கொடுத்து வருகிறது. இன்றைய தினம் முதல்வருக்கு இடஒதுக்கீட்டுக்கான கெடுவையே விதித்துவிட்டது.
தேமுதிக
அது போல் தேமுதிகவும் அண்மைக்காலமாக அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. அதிமுகவுக்கு பிடிக்காத சசிகலாவை ஆதரித்து பேசி வருகிறது. இன்றைய தினமும் கூட பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது எடப்பாடி மக்களால் முதல்வராகவில்லை. அதிமுகவினரால் முதல்வராக்கப்பட்டுள்ளார்.
புகழ்ந்து தள்ளிய பிரேமலதா
ஒரு பெண்ணாக சசிகலாவிற்கு எனது ஆதரவு எப்பொழுதும் உண்டு. தேர்தலுக்கு நேரம் குறைவாக இருப்பதால் கூட்டணி குறித்து உடனடியாக பேசி முடிவெடுக்க வேண்டும். சசிகலா அரசியலுக்கு வர வேண்டும்; தவறில்லை என்பது என் கருத்து. . முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்து அனைத்தையும் செய்தவர் சசிகலா என முதல்வரை விமர்சித்தும் சசிகலாவை புகழ்ந்தும் பேசினார் பிரேமலதா.
தேமுதிகவுக்கு 41 இடங்கள்
இன்னொன்றையும் கூறியிருந்தார், அதாவது அதிமுகவிடம் இருந்து 41 இடங்களை எதிர்பார்க்கிறோம் என்றார் பிரேமலதா. இவர் கேட்ட தொகுதிகள் கிட்டத்தட்ட 2011 ஆம் ஆண்டு தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் ஆகும். கடந்த சில தேர்தல்களில் தேமுதிகவுக்கு வாக்கு வங்கியே இல்லாத நிலையில் 40 இடங்களை அதிமுக எப்படி ஒதுக்கும் என்பது சந்தேகமாக இருக்கிறது.