விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார்... மாவட்டச் செயலாளர்களிடம் உறுதி கொடுத்த பிரேமலதா..!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிரச்சாரத்துக்கு வருவார் என்ற உறுதியை வழங்கியுள்ளார் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதனிடையே மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
காவல்துறை மூலம் கோழைத்தனமாக என் மீது வழக்கு... முதலமைச்சர் மீது கடுகடுக்கும் ஆ.ராசா..!
தேமுதிக நிர்வாகிகள்
நீண்ட காலத்துக்கு பிறகு தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றதோடு விஜயகாந்தின் உடல்நிலை பற்றி நேரில் கேட்டறிந்தனர். மேலும், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.
தேமுதிக பொதுக்குழு
சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதுடன் தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் ''கேப்டன் கண்டிப்பாக தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார், அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்'' என்றுக் கூறி நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டினார்.
டாஸ்மாக் மூடல்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண குழு அமைக்க வேண்டும், தமிழகம் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை பழுதுபார்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் சந்திப்பு
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த கையோடு அனைத்து நிர்வாகிகளும் விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகரனை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தலைமைக்கழக நிர்வாகிகள் தொடங்கி அடிமட்டத் தொண்டர்கள் வரை சந்தித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார் விஜயபிரபாகரன்.