அமெரிக்காவிலிருந்து விஜயகாந்த் படங்கள் வெளியானதன் பின்னணி.. வதந்திக்கு ஃபுல்ஸ்டாப் வைத்த பிரேமலதா!
சென்னை: அமெரிக்காவில் உள்ள விஜயகாந்துக்கு உடல்நிலை மோசமடைந்ததாக ஓர் செய்தி வைரலான நிலையில் அவர் நலமோடு இருக்கிறார் என அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்துக்கு தொண்டையில் தைராய்டு பிரச்சினை ஏற்பட்டதால் அவருக்கு ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது ஆசான் கருணாநிதியின் மறைவின் போது கூட அவர் அமெரிக்காவில் இருந்து இரங்கலை அழுது கொண்டே தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த அவர் முதல் வேலையாக கருணாநிதியின் சமாதியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை மருத்துவமனையில்
இதையடுத்து அவருக்கு மீண்டும் ஒரு முறை உடல் நல பிரச்சினை காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வீடு திரும்பினார். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அமெரிக்கா
இந்நிலையில் அமெரிக்காவில் அவருக்கு தொண்டையில் ஏற்பட்ட தைராய்டு பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதையடுத்து அவர் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு புறப்பட்டனர்.
யாருடனும் பேசவில்லை
அமெரிக்காவில் நேற்று முன் தினம் அவரது உடல்நிலை மோசமடைந்ததாக செய்திகள் வந்தன. இதனால் தொண்டர்கள் பதற்றம் அடைந்தனர். மேலும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அவரது நண்பர்களிடம் தினமும் பேசும் வழக்கத்தை கொண்ட விஜயகாந்த் நேற்று முன் தினம் யாரிடமும் பேசவில்லை.
புகைப்படங்கள்
இதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதனிடையே மைத்துனர் சுதீஷ் அவசர அவசரமாக வெளிநாட்டுக்கு சென்றதால் அந்த பரபரப்பு மேலும் அதிகமானது. இதைத் தொடர்ந்து விஜயகாந்த் தனது நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படங்கள் நேற்று வெளியாகின.
சிகிச்சை தொடங்கவில்லை
இதை பார்த்த தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். இதுகுறித்து அமெரிக்காவில் பிரேமலதா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: விஜயகாந்துக்கு தைராய்டு பிரச்சினை காரணமாக சிகிச்சைக்கு வந்தோம். அவருக்கு இன்னும் சிகிச்சை தொடங்கவில்லை.
பதற்றம் வேண்டாம்
இன்னும் 2 நாட்கள் கழித்துதான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். தற்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார். எனவே அவரது உடல்நிலை குறித்து யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று பிரேமலதா தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.