குட்ட குட்ட குனிஞ்சிட்டிருக்க மாட்டோம்.. கண்டிப்பா விஜயகாந்த் ஆட்சி வரும்.. பிரேமலதா ஆவேசம்!
சென்னை: கூட்டணி என்பதால் குட்ட குட்ட குனிய மாட்டோம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக பிரதிநிதிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரஜினி வெறும் அம்புதாங்க.. அவரை யாரோ இயக்குகிறார்கள்.. துக்ளக் விழாவில் இதையா பேசுவது?.. பிரேமலதா
கூட்டணி
இந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அவர் பேசுகையில் தொண்டர்கள்தான் எங்கள் குடும்பம். திருமண நாளை உங்களுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கும் ஒரே கட்சி தேமுதிகதான். கூட்டணி என்பதற்காக குட்ட குட்ட குனிய மாட்டோம்.
தேமுதிக மிகப் பெரிய கட்சி
குட்ட குட்ட குனியும் ஜாதி இல்லை தேமுதிக. நாங்கள் மீண்டு எழுவோம். 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு கிராமம் கிராமமாக சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். விஜயகாந்த் மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்வார். இந்த தேர்தலில் தேமுதிக மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும்.
அரசியல் வட்டாரம்
விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி மலரும். இதுதான் எங்கள் நோக்கம். விஜயகாந்த் ஆட்சிக்கு வரும் வரை ஓயமாட்டோம். 2021-ஆம் ஆண்டு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போமா இல்லையா என்பதை தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என்றார். பிரேமலதா இவ்வாறு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேமலதா
இவரது இந்த கருத்து மூலம் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஏதோ பிரச்சினை இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. சட்டசபை தேர்தலில் ஆட்சியமைப்போம் என பாஜக கூறியுள்ள நிலையில் பிரேமலதாவும் தேர்தலில் விஜயகாந்த் ஆட்சியை பிடிப்பார் என கூறியுள்ளார். மறைமுகத் தேர்தல் பிரச்சினையில் தேமுதிகவுக்கு ஏதேனும் பிரச்சினையா என தெரியவில்லை. மேலும் தர்மத்தை கடைப்பிடிக்கும் கட்சி அதிமுக என கூறி வரும் நிலையில் பிரேமலதா தேமுதிக என கூறியுள்ளார்.