3வது அணி வராதுங்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.. ஒரு வேளை அமைச்சர் பதவி கொடுத்தா வேண்டாம்னு மறுப்பாரா
3-வது அணி அமையுமா என்பது பிரேமலதா விஜயகாந்த் கருத்து கூறியுள்ளார்
சென்னை: மத்திய அமைச்சர் பதவி கொடுத்து, எடுத்துக்கங்கன்னு சொன்னால் தேமுதிக என்ன செய்யும்? வேண்டாம்னு சொல்லிடுமா? அல்லது எங்க கூட்டணி தர்மம்தான் முக்கியம்னு சொல்லிடுமா? இதுதான் விஷயமே!
நேற்று சந்திரசேகரராவ் சென்னை வந்து போனதில் இருந்தே தமிழக அரசியல் தகதகவென்று தகிக்க துவங்கி உள்ளது. 3-வது அணி அமையுமா, அப்படி அமைந்தால் திமுக ஆதரவு தருமா? அப்படி தந்தால் அதிமுக-பாஜக கூட்டணி என்னாகும்? என்ற சந்தேகங்கள் எல்லாம் எழுந்துள்ளன.
ஆனால் 3-வது அணி அமைய வாய்ப்பே இல்லை என்றுதான் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, ஏன், ஸ்டாலினே சொல்லி வருகிறார். 4 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த்தும் கூட 3வது அணி வராது என்றே கூறியுள்ளார்.
வெறும் கற்பனை
இதுபற்றி பிரேமலதா விஜயகாந்த் சொல்லும்போது, "''மத்தியில், மூன்றாவது அணி ஆட்சி என்பது, வெறும் கற்பனை; சந்திரசேகர ராவ், ஸ்டாலின் சந்திப்பால் எதுவும் நடக்காது, மூன்றாவது அணி என்பது, நிழல் போன்றது. வெறும் கற்பனை. இந்த சந்திப்பை ஒரு சடங்காகவே பார்க்கிறேன். இந்த சந்திப்பால், எதுவும் நடக்கப் போவது இல்லை. தேர்தல் முடிவு, எப்படி இருக்கும் என்பதை அறிந்து, ஏதோ திட்டம் போடுகின்றனர்; அது பலிக்காது. இருந்தாலும் 3-வது அணி என்பது வேஸ்ட்" என்று கருத்து சொல்லி இருந்தார்.
பேச்சுவார்த்தை
அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளதால் பிரேமலதா இப்படி சொன்னாரா என தெரியவில்லை. ஏனெனில் எந்த தேர்தலாக இருந்தாலும் முன்கூட்டியே பேச்சுவார்த்தையை தொடங்குவது தேமுதிகதான். அதாவது சுதீஷும், பிரேமலதாவும்தான்!
பாஜக
சீட் விவகாரம் முதல் தேர்தல் செலவு, இன்ன பிற இத்தியாதி வரை பேசி முடித்து விடுவார்கள். அப்படி இருக்கும்போது, இந்த முறையும் கண்டிப்பாக பேச்சுவார்த்தை எழவே செய்யும். பாஜகவின் நன்மதிப்பை தேமுதிக பெற்றிருப்பினும் மத்திய அமைச்சரவை, சீட் விவகாரங்களில் எந்த அளவுக்கு தேமுதிகவுக்கு தாராளத்தை காட்டும் என்று சொல்ல முடியாது.
பதவி, பொறுப்பு
அதே சமயத்தில் காங்கிரஸ் தரப்போ, ஆட்சியைப் பிடிக்கவும், அதை நிலைநிறுத்தவும் எல்லாவித வியூகங்களையும் கையில் எடுக்கவே செய்யும். ஒருவேளை தேமுதிக ஏதாவது ஒரு தொகுதியில் ஜெயித்து விட்டால் அதை வைத்தே பல காரியங்களை அக்கட்சி சாதிக்க முயலும். அப்படி நடந்தால், அமைச்சர் பதவியை யார் தர முன்வந்தாலும் அதை நிச்சயம் தேமுதிக தட்டாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பதவி, பொறுப்பை வேண்டாம், எங்களுக்கு கூட்டணி தர்மம்தான் முக்கியம் என்று சொல்லிவிடுமா, அல்லது வெளியிலிருந்து காங்கிரசுக்கு ஆதரவு தருமா? என்று தெரியவில்லை.
ஒரிஜினல் முகம்
ஏனென்றால், இப்போது யாரும் யார்கூட வேண்டுமானாலும் கூட்டணி வைத்து அரசியல் செய்யலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். தேர்தலுக்கு முன்பு ஒரு முகம், பின்பு ஒரு முகம் என்பதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் ஒரிஜினல் முகம்.. (மக்களுக்கு அது புரிவதில்லை, புரிந்தாலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை) அது ஸ்டாலின்-கேசிஆர் சந்திப்புவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. எதுவாக இருந்தாலும், கிளைமேக்சில் தான் தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகமும், நிலைப்பாடும் தெரியும் என்பதே இன்றைய நிலை!
ஆதாயம் இருக்குமா?
அதேசமயம், தேமுதிகவைப் பொறுத்தவரை வெளியில் 3வது அணி வராது, பாஜகவே ஆட்சியமைக்கும் என்று கூறி வந்தாலும் நாளை மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தங்களுக்கு ஆதாயம் இருக்கும் என்று தெரிந்தால் பாரபட்சம் பார்க்காமல் ஆதரவுக் கரம் நீட்டும் என்பதையும் மறுக்க முடியாது.