கொரோனா நோய் தடுப்பு பணிகள்... ஆளுநர்களுடன் ஜனாதிபதி இன்று ஆலோசனை
சென்னை: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் பங்கேற்கிறார். டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் இருந்தவாறு காணொலி மூலம் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி குடியரசுத் தலைவர் ஆளுநர்களிடம் கேட்டறிவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், நோய் பாதிப்பு பற்றியும் அவர் கேட்டறிவார் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நோயிலிருந்து மக்களை காப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன. நோய் தொற்றுடைய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர்களுடன் பிரதமர் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தியது போல் இன்று ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றை அடியோடு ஒழிக்க செஞ்சிலுவை சங்கத்தின் பங்களிப்புகள், மத்திய அரசின் நடவடிக்கைகள், தனியார் நிறுவனங்கள் தரும் ஒத்துழைப்புகள் பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த மார்ச் 27-ம் தேதி இதேபோல் அனைத்து மாநில ஆளுநர்களுடன் கொரோனா நோய் தடுப்பு பற்றி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்று நடைபெறுவது இரண்டாவது ஆலோசனைக் கூட்டமாகும்.
கொரோனா நோய் தொற்று வீரியமாகி வருவதால் முதல் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு ஒரே வாரத்தில் மீண்டும் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.