ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை.. ஹிந்தி பிரச்சார சபாவில் காந்தி சிலையை திறந்து வைத்தார்
சென்னை: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை தந்தார். அவரை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றனர்.
குடியரசு தலைவர் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்றுமுதல், 2 நாள் பயணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் சுற்றுப் பயணம் செய்கிறார். முதல்கட்டமாக, சென்னைக்கு இன்று மதியம் 1.30 மணியளவில் விமானத்தில் வந்திறங்கினார்.
விமான நிலையத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அதிகாரிகள் நேரில் வந்து வரவேற்றனர்.
ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்த ராம்நாத் கோவிந்த், இன்று மாலை தி.நகரிலுள்ள, ஹிந்தி பிரசார சபாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்தார்.
இதையடுத்து, தொடர்ந்து ஆளுநர் மாளிகை சென்ற குடியரசு தலைவர், அங்கேயே தங்குகிறார். நாளை, காலை ஹெலிகாப்டர் மூலம் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு செல்கிறார். அங்கு ஸ்வர்ண பாரதி அறக்கட்டளையின் 18வது ஆண்டு விழாவில் நாளை கலந்து கொள்வார்.
குடியரசு தலைவர் வருகையையொட்டி, சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.