”மன்னிப்பு கேளுங்க அண்ணாமலை” - வீதிக்கு வரும் பத்திரிகையாளர் அமைப்புகள்... நாளை சென்னையில் போராட்டம்
சென்னை: பத்திரிகையாளர்களை கண்ணியக்குறைவாக பேசிய அண்ணாமலையை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர் சங்கங்கள் நாளை போராட்டத்தை அறிவித்து இருக்கின்றன.
சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேரம் பேசுவதை போல் அண்ணாமலை விமர்சித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
அண்ணாமலையின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
”MRS சிறிசேனா” மோடியின் ஆங்கில அறிவே இதுதான்! பழைய வீடியோவை தேடியெடுத்து அண்ணாமலையை கலாய்த்த ஜோதிமணி

செய்தியாளர் கேள்வி
தமிழ்நாடு பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம், "பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த சமயம் அவரை வரவேற்பதற்கு பாஜக சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

பேரம் பேசிய அண்ணாமலை
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, காவல்துறையின் அனுமதியுடன்தான் பேனர் வைக்கப்பட்டதாகவும், விதியை மீறி பேனர் வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா? என்று செய்தியாளரிடம் கேட்டார். இதற்கு அந்த செய்தியாளர், தன்னிடம் உள்ள ஆதாரம் குறித்து விளக்க ஆரம்பித்த போது, அவரை பேச விடாமல் தடுத்த அண்ணாமலை, உங்களுக்கு "200 ரூபாய் நிச்சயம்" என்று பேசினார்.

ரூ.1000 வாங்கிக்கொள்ளுங்கள்
இதற்கு அங்கிருந்த மற்ற செய்தியாளர்கள் கண்டித்த போது, சரி 500 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது 1000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று அண்ணாமலை பேசினார். இதற்கு நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் கணக்கில் பதிவிட்டுள்ளது.

பெண் பத்திரிகையாரிடம் சீண்டல்
பிரதமர் மோடி சென்னை வந்தபோது சுவாமி சிவானந்த சாலையில் வரவேற்பு அளிக்கும் நிகழ்வு குறித்து பத்திரிகையாளர்கள் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பாஜகவை சேர்ந்த பிரமுகர் பெண் செய்தியாளரிடம் தவறாக நடந்துகொண்டதாக பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலையிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பத்திரிகையாளர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

போராட்டம் அறிவிப்பு
இந்த நிலையில்தான் அண்ணாமலை "பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், பெண் பத்திரிகையாளரிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" ஆகியவற்றை வலியுறுத்தி சென்னை பத்திரிகையாளர் மன்றம், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை கூட்டாக போராட்டம் அறிவித்துள்ளன. நாளை திங்கட்கிழமை (30.05.22) மாலை 4.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்ற வளாகம் அருகே இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.