சிம்பு பட ரிலீஸ் அன்று பால் திருடு போகாமல் தடுங்கள்... பால் முகவர்கள் கோரிக்கை
சென்னை: சென்னை: "வந்தா ராஜாவா தான் வருவேன்" படம் வெளியாகும் நாளில் பால் திருடு போகாமல் தடுக்க காவல்நிலையத்தில் புகார் அளிக்க தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள "வந்தா ராஜாவா தான் வருவேன்" படம் பிப்ரவரி 1 ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தநிலையில், தனது கட்அவுட்டுக்கு பால் பாக்கெட் வேண்டாம் அண்டாவில் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறிய நடிகர் சிம்புவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
எனது திரைப்படம் வெளியாகும் போது இதுவரை இல்லாத அளவுக்கு பேனர் வையுங்கள். மேலும் கட் அவுட்களுக்கு பாக்கெட்டுகளில் பால் ஊற்றாமல் குடத்தில் ஊற்றுங்கள் என ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிடுவதாக நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதற்கு சிம்பு மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்போவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நேற்று தெரிவித்திருந்தது.
அண்டாவில் பாலாபிஷேகம்
ஏற்கனவே நான் வெளிட்ட வீடியோ குறித்து சிலர் விமர்சனம் செய்வதாகவும் எனக்கு ரசிகர்களே இல்லை என விமர்சனம் செய்கின்றனர். விமர்சனம் செய்தவர்களுக்காக பேனர், கட் அவுட்டுகளுக்கு பால் ஊற்ற வேண்டும் என நடிகர் சிம்பு கூறியுள்ளார். தனது படங்களுக்கு பேனர் வைக்க வேண்டாம். அதற்கு பதிலாக அம்மாவுக்கு புடவை வாங்கி கொடுங்கள் என முந்தைய வீடியோவில் சிம்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புகார் அளிக்க முடிவு
இந்தநிலையில், "வந்தா ராஜாவா தான் வருவேன்" படம் வெளியாகும் நாளில் பால் முகவர்களின் கடைகளில் இருந்து பால் திருடு போகாமல் தடுக்க, சிறப்பு பாதுகாப்பு அளிக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது.
பால் மூலம் விளம்பரம்
பலர் பிரச்சனைகளை சந்தித்து வரும் நடிகர் சிம்பு, இந்த பால் பிரச்சனை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், படத்திற்கு பால் மூலம் விளம்பரம் கிடைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியாகும் போது எந்த பிரச்சனையும் வராமல் வந்தால் சரி என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.