வெளிக்கிளம்பிய கீழடி.. தலை நிமிர்ந்த தமிழ்.. பெருமிதத்தில் மிதந்த தமிழர்கள்.. 2019ன் கெத்து தருணம்!
சென்னை: 2600 ஆண்டுகளுக்கு முன்பே வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்தது இந்த மண்ணும் விண்ணும் இருக்கும் வரை தமிழர்களின் பெருமையாக இருக்கும்.
தமிழர்களின் பெருமையாக மொழி, இலக்கியம், பண்பாடு, விருந்தோம்பல், கலாசாரம், கலைகள், கட்டடக் கலைகள், கோயில்கள், சங்க காலம், நெற்களஞ்சியம், ஜோதிடக் கலைகள், கோயில்கள், புராதன சின்னங்கள் உள்ளிட்டவை கருதப்படுகின்றன.
ஆனால் இன்று கீழடி என்ற சிறிய கிராமம் தமிழர்களின் பெருமைகளில் ஒன்றாகிவிட்டது. சிந்து சமவெளி நாகரீகத்திற்கு பிறகு தமிழகத்தில் நகர நாகரீகங்கள் தோன்றவில்லை என நினைத்திருந்த நிலையில் 2600 ஆண்டுகளுக்கு முன்பே வைகை சமவெளி நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் மதுரை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இங்கு 2011 ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 5 கட்ட அகழாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல.. உழவர் திருநாள்!
தொல் எச்சங்கள்
தமிழகத்தில் நடைபெற்ற ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு உள்ளிட்ட அகழ்வாய்வுகளிலேயே மிகப் பெரிய அளவில் நடக்கும் அகழ்வாராய்ச்சி கீழடி அகழ்வாராய்ச்சிதான். இங்கு 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு சங்க கால மக்கள் விட்டுச் சென்ற தொல் எச்சங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
உறை கிணறுகள்
சங்க இலக்கிய பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்தும் இங்கே கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக் காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மணிகள்,தந்தங்கள், அணிகலன்கள், சுடுமணி காதணிகள், இரும்பு கருவி பாகங்கள், கண்ணாடி, விலையுயர்ந்த மணி கற்கள் தாயகட்டைகள் கிடைத்துள்ளன. மேலும் குடிநீரை சேமித்து வைக்கும் உறை கிணறுகளும் மழை நீர் வடியும் வகையில் விரல்களால் அழுத்த பள்ளம் இடப்பட்ட அமைப்பை கொண்ட கூரை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பழமையானது
6ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட ஓடுகளும் கிடைக்கப் பெற்றன. அரிக்கமேடு அகழாய்வில் கிடைத்ததை விட இங்கு ஏராளமான கட்டடங்கள் கிடைக்கப்பெற்றன. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து கார்பன் பரிசோதனை செய்ததில் சங்க காலம் மேலும் பழமையானது என தெரியவந்துள்ளது.
அகழாய்வு பணிகள்
5-ஆம் கட்ட அகழாய்வில் பல்வேறு செங்கல் கட்டுமானங்கள் வெளிக் கொணரப்பட்டன. இக்கட்டுமானங்கள் செங்கலால் ஆன திறந்த நிலையிலான வாய்க்கால், மூடிய நிலையிலுள்ள வடிகால், சுருள் வடிவிலான சுடுமண் குழாய் போன்ற வடிகால் அமைப்புகள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில் இங்கு தற்போது 6-ஆவது கட்ட அகழாய்வு பணிகள் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இன்று கீழடி அகழாய்வு பணிகளை சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடுகின்றன. ஒரு சிறிய கிராமம் இன்று உலகம் முழுவதும் பிரபலமடைந்திருப்பது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமையாகும்.