குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்க பிரதமர் திட்டம்... சரத்குமார் சொல்கிறார்
சென்னை: கருத்துக்கணிப்புகளைத் தாண்டி தமிழகத்தில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளது. இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள பாஜ கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நேற்று தடால்புடலாக விருந்து அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து முதல்வர், துணை முதல்வர், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், சரத்குமார் உள்ளிட்டோர், பாஜக அளித்த விருந்தில் கலந்து கொண்டனர். பின்னர், நடந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக, பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டால், அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ல் நடக்கும் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்கு முன்பே மீட்டிங்.. முக்கிய அமைச்சக உயர் அதிகாரிகளுடன் மோடி திடீர் ஆலோசனை
அதே நேரம், கடந்த சில தேர்தல்களில், கருத்துக்கணிப்புகள் பொய்யாகி இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வரும் எதிர்க்கட்சியினர், இவிஎம்இயந்திரத்தில் மோசடி நடைபெற்று விட்டதாக, குற்றம்சாட்டி உள்ளனர். இதற்கிடையே, தமிழகத்தில் நடந்த 22 தொகுதி இடைத்தேர்தலில் 5 - 6 இடங்களை மட்டுமே அதிமுக கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கருத்துக்கணிப்புகளைத் தாண்டி தமிழகத்தில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மத்தியில் தனி அமைச்சகம் உருவாக்க பிரதமர் திட்டம் வைத்திருப்பதாகவும் கூறினார்.