சசிகலா வருகைக்கு முன் ஒன்றுபட்ட ஒபிஎஸ்-இபிஎஸ்... டெல்லிக்கு.. டிடிவிக்கு சொன்ன மெசேஜ்.. பரபர பின்னணி
சென்னை: சசிகலா வருகைக்கு முன்பாக யார் முதல்வர் , யாருக்கு கட்சியில் அதிகாரம் என்பதில் ஒபிஎஸ்-இபிஎஸ் இருவரும் ஒன்றுபட்டு முடிவு செய்துவிட்டார்கள். இதன் மூலம் சசிகலா விடுதலையாகி வந்தாலும் அவருக்கு கட்சியில் எந்த பங்கும் இருக்கக்கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது.
கட்சியும் ஆட்சியும் இனி நாங்கள் தான், இதில் யாருடைய தலையீட்டையும் இனி அனுமதிக்க மாட்டோம் என்பதாக பாஜகவுக்கும், டிடிவி தினகரனின் அமமுகவுக்கும் வலுவான மெசேஜ் கொடுத்தார்கள் ஒபிஎஸ்-இபிஎஸ்.
சசிகலா விடுதலைக்கு நாள் குறிக்கப்பட்ட நாளுக்கு பின்னர் தான் அதிமுகவில் தலைமை பஞ்சாயத்து உருவானது. முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சையும் உருவானது. ஏனெனில் கடந்த மாதம் திடீரென தனி விமானத்தில் டிடிவி தினகரன் டெல்லி சென்றார். அங்கு பாஜக மேலிட தலைவர்களை சந்தித்தது கூறப்படுகிறது. இதுதான் அதிமுக வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தியது.
முதல்வர் வேட்பாளராகி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.. இனிதான் இருக்கு அவருக்கு சவாலே!
முதல்வர் வேட்பாளர் சர்ச்சை
இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 27ம் தேதி முதல்வர் வேட்பாளராக என்னை அறிவிக்க வேண்டும் என்று கூறி செயற்குழுவில் முதல் குண்டை வெடித்தார் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். ஒருபக்கம் கட்சியிலும் ஆட்சியிலும் எடப்பாடியின் கை ஓங்கிவிட்ட நிலையில், சசிகலா வருகை குறித்த தகவலுக்கு பின்னர் தனக்கான அதிகாரத்தை நிலைநாட்ட ஒபிஎஸ் விரும்பியதாக கூறப்படுகிறத. இதனால் தான் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை எழுந்தது.
முதல்வர் வேட்பாளர்
இதற்கு செயற்குழுவில் பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை தான் முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முதல்வர் எடப்பாடிக்கே பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஓ பன்னீர்செல்வம் கட்சியில் வழிகாட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு முதலில் எடப்பாடி தரப்பு சம்மதிக்கவில்லை. ஆனால் நீண்ட பேச்சுவார்தைக்கு பின்னர் ஒப்புதல் அளித்தது. அதன்பிறகே இன்று முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளார்.
சசிகலா வந்துவிடக்கூடாது
ஒ பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்கள் 5 பேருக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவில் இடம் வாங்கி கொடுத்து கட்சியில் தனக்கு உள்ள அதிகாரத்தை நிலை நிறுத்தி உள்ளார். மீதமுள்ளவர்கள் எல்லோரும் எடப்பாடியாரின் ஆதரவாளர்கள் என்று சொல்லிவிட முடியாது. அதேநேரம் இந்த சமரச உடன்பாட்டின் படி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக வழக்கம் போல் எடப்பாடி தொடர்வார். முதல்வர் வேட்பாளரும் அவர் தான். இதன் மூலம் கட்சியிலும் ஆட்சியிலும் ஓரளவு சம அதிகாரம் உடையவர்களாக ஓபிஎஸ் இபிஎஸ் மாறிவிட்டார்கள். மூன்றாவதாக சசிகலா வந்துவிடக்கூடாது. யாரும் சசிகலாவிற்கு ஆதரவாக பேசி உள்ளே குழப்பம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருப்பது இந்த சமசரத்தில் தெரிகிறது.
சமமான பங்கீடு
அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் சசிகலா விடுதலையாகி வந்தாலும் அவரால் அடுத்த ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் அவர் சார்பாக யாராவது ஒருவரை முன்னிறுத்தி தான் செயல்படுவார். அந்த வகையில் டிடிவி தினகரனே முன்னிறுத்தப்படுவார். டிடிவி தினகரனை உள்ளே விடக்கூடாது என்பதில் ஒபிஎஸ் இபிஎஸ் ஒன்றுபட்டதாக தெரிகிறது. அத்துடன் முதல்வர் வேட்பாளர் யார் என்பதையும், கட்சியில் அதிகாரப்பகிர்வையும் இருவரும் சமமாக பங்கிட்டு கொண்டுவிட்டதாக தெரிகிறது.
எப்படி சமரசம்
இன்றைய முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் வழிகாட்டு குழு அறிவிப்புகள் மூலம் இனிமேல் அதிமுகவில் தலையிட யாரும் முடியாது என்ற மெசேஜ்ஜை மறைமுக டெல்லி மேலிடத்திற்கு உணர்த்தியுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. ஒபிஎஸ் ஏன் முதல்வர் வேட்பாளர் பதவியை விட்டுக்கொடுத்தார், மத்திய அமைச்சராக ஓபிஆர் ஆக எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா? அதிகாரத்தில் பங்கீடு உள்ளிட்டவை விஷயத்தில் எடப்பாடியும் ஒபிஎஸ்ம் எந்த அடிப்படையில் சமசரத்திற்கு வந்தார்கள் என்ற கேள்விகள் எழுகிறது.