தமிழகத்தில் நாளை முதல் தனியார் பஸ்கள் இயக்கம்.. கட்டண உயர்வு கிடையாது.. வெளியான அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய கட்டணம்தான் வசூலிக்கப்படும்.
ஐந்தாவது கட்ட ஊரடங்கு காலத்தில் அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி ஜூன் 1ம் தேதி முதல், தமிழகத்தில் அரசு பஸ்கள் இயக்கம் ஆரம்பித்தது.
அதேநேரம் தமிழகத்தின் மாவட்டங்கள், மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அந்த மண்டலங்களுக்கு உள்ளே மட்டும், பேருந்துகள், இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
யாரும் கூட்டு சேர கூடாது.. ஓநாய் வீரர்கள் மூலம் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் சீனா.. புதிய பிக்பாஸ்!
மண்டலங்கள்
உதாரணத்துக்கு, ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்கள் ஒரே மண்டலம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. அதேபோல, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மற்றும் தென்காசி ஆகியவை ஒரே மண்டலங்கள். இந்த மண்டலங்களுக்கு உள்ளே மட்டும் பேருந்துகள் இயங்குமே தவிர, அங்கிருந்து வேறு மாவட்ட எல்லைக்குள் பேருந்துகள் செல்லாது.
இ பாஸ் வசதி
தனியார் வாகனங்களும் இந்த மண்டலங்களில் பாஸ் பெறாமல் இயங்கலாம். வேறு மண்டலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இ பாஸ் பெற வேண்டியது கட்டாயம். அதேநேரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை.
நாளை முதல் தனியார் பஸ்
அதேநேரம், தனியார் பேருந்துகள் இயக்கம் இதுவரை தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில் தனியார் பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் தர்மராஜ் இன்று அளித்துள்ள ஒரு பேட்டியில், நாளை முதல், தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
சென்னையில் பஸ் போக்குவரத்து இல்லை
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பஸ்களில் 60% பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல அரசு அறிவுறுத்தியதற்கு இணங்க வழிமுறைகள் பின்பற்றப்படும். மண்டலம் விட்டு மண்டலம் பஸ்கள் இயங்காது.
பஸ் கட்டண உயர்வு இல்லை
கட்டண உயர்வு அமல்படுத்தப்படாமல், பழைய கட்டணத்தில் தான் பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு தர்மராஜ் தெரிவித்துள்ளார். டீசல் விலை உயர்வு, குறைவான இருக்கைகளில்தான் பயணிகளை ஏற்றிச் செல்வதால் ஏற்படும், நஷ்டம் போன்றவற்றை ஈடுகட்ட, கட்டண உயர்வை, தனியார் பஸ்கள் அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்டண உயர்வு இல்லை என அறிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.