ஸ்கூல் ஃபீஸ், பஸ் ஃபீஸ், ஆன்லைன் ஃபீஸ் எல்லாம் கட்டினவங்க எத்தனை பேரு?
நமது குழந்தைகளில் பெரும்பாலானோர் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாடத்திட்டம் பெற்றோர்களுக்கு ஒரு சில அசௌகரியங்களை ஏற்படுத்தினாலும் இந்த கொரோனா கால கட்டத்தில் மிக முக்கியமான அசவுகரியம் பள்ளி கட்டணம்.
நமது கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்க படுவதால் ஜூன் மாதம் தான் மெட்ரிக் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை வசூலிக்கும். ஆனால் இந்த சிபிஎஸ்இ பள்ளிகள் மார்ச் மாதமே அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை வசூலிக்கிறார்கள்.
அதற்கு காரணமாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதமே பள்ளி தொடங்கப்படுகிறது என்ற காரணத்தை கூறுகின்றார்கள். ஏப்ரல் மாதத்தில் ஒரு சில நாட்கள் வகுப்புகளை ஆரம்பித்து விட்டு மே மாதம் முழுக்க விடுமுறை அறிவித்து விடுகிறார்கள். பங்குனி சித்திரையில் நமது வெயிலுக்கு குழந்தைகள் வீட்டில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையும் இதனால் உடைக்கப்படுகிறது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளிகள் இம்முறையைப் பின்பற்றினாலும் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்
ஆனால் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள் ஏப்ரல் மாதம் தங்களுடைய கல்வி ஆண்டு தொடங்குவதற்கு பள்ளி கட்டணத்தை மார்ச் மாதமே வசூலித்து விடலாம் என்கின்ற ஆசையை தவிர வேறொன்றும் இருப்பதாக தோன்றவில்லை.
5ம் வகுப்பு வரை.. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை.. கர்நாடக அரசு அதிரடி உத்தரவு!
பெற்றோர்களின் கவலை இவ்வாறு ஒருபுறமிருக்க வேறு பள்ளிக்கு மாற நினைக்கும் மாணவர்களின் நிலைமை அந்தோ பரிதாபம். அவ்விதம் மாற நினைப்பவர்கள் நடப்பு கல்வியாண்டில் டிசம்பர் மாதமே தங்களுடைய மாறுதலை பற்றி பள்ளிக்கு அறிவிக்க வேண்டும். இல்லையேல் அடுத்த கல்வி ஆண்டிற்கான முதல் தவணை கட்டணத்தை கட்டிய பிறகு அவர்களுக்கு டிசி வழங்கப்படும்.
இவை இரண்டும் அல்லாத மூன்றாவதாக இன்னொரு பெரிய கொள்ளை நடக்கிறது அது பள்ளி வேன் வசதி ஏற்பாடு என்ற பெயரில். அடுத்த கல்வியாண்டின் பள்ளி பேருந்திற்கான முழு கல்வியாண்டிற்கான கட்டணத்தையும் நடப்பு கல்வியாண்டின் மார்ச் மாதமே செலுத்திவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வாங்கி விடுகிறது.
இந்த கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பள்ளி பேருந்துகள் இயக்கப் பட்டாலும் அதில் எங்கள் குழந்தைகளை நாங்கள் அனுப்ப விரும்பவில்லை எங்களுக்கு நாங்கள் செலுத்திய பள்ளிப் பேருந்து கட்டணத்தை திருப்பித் தாருங்கள் என்று கேட்கும் பெற்றோருக்கு கிடைக்கும் மரியாதை வேற லெவல்.
சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் வருகின்ற குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருமே குறைந்தபட்சம் முதல் தவணை கல்விக் கட்டணத்தையும் பேருந்து கட்டணத்தையும் கட்டிவிட்டு தவியாய்த் தவிக்கின்றார்கள். இது போதாதென்று இன்னும் சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு என்று தனியாக வசூலிக்கிறார்கள் என்றும் ஒரு செய்தி.
பள்ளி கட்டணம், பேருந்து கட்டணம், ஆன்லைன் வகுப்புக் கட்டணம் இவை அனைத்திற்கும் ஒரு முறையான அறிவிப்பை அரசிடமிருந்து பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள். 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து நல்ல முடிவை எடுத்தது போல இதற்கும் ஒரு முடிவு கட்ட அரசு முன்வர வேண்டும் என்பது பெற்றோர்களின் தாழ்மையான கோரிக்கை.
- நமது வாசகர்.