என்னது ஸ்ட்ரைக்கா... அய்யய்யோ.. பீதியில் சென்னை மக்கள்!
சென்னை: தனியார் தண்ணீர் லாரிகள் வரும் 27 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.
சென்னையில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இருந்தாலும் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பின் இந்த ஆண்டுதான் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
பருவ மழைகள் பொய்த்து போனதே இதற்கு காரணம். போதிய மழை இல்லாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி நீர்த்தேக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு போய்விட்டன.
விவசாயிகள் கண்ணீர்.. ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பில்லையாமே
வற்றிய கிணறுகள்
நிலத்தடி நீரும் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டதால், சென்னையில் கிணறு மற்றும் ஆழ்துளை குழாய் தண்ணீரை நம்பியிருந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகர் புறங்களில் நீடிக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் புறநகர் பகுதிகளுக்கு வீடுகளை காலி செய்துவிட்டு செல்கின்றனர்.
அன்றாட தேவை
பெரும்பாலான குடியிருப்புகளில் தண்ணீர் லாரிகள் மூலம் பெறப்படும் தண்ணீரை வைத்தே அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துவருகின்றன. இதனால் நாள்தோறும் சென்னையின் பல இடங்களில் மக்கள் குடங்களோடு அலைவதை பார்க்க முடிகிறது.
தாகம் தீர்க்கும் லாரிகள்
சென்னை மக்களின் தாகத்தை தனியார் லாரிகள்தான் தீர்த்து வருகின்றன. இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் தண்ணீர் லாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்துளை குழாய் மூலம் தண்ணீர் எடுப்பதை கண்டித்து அப்பகுதி திருமழிசை பூவிருந்தவல்லி உள்ளிட்ட இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
வேலைநிறுத்தம்
தனியார் தண்ணீர் லாரிகள் நிலத்தடி நீரை எடுக்கவும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நிலத்தடி நீரை எடுக்க உரிமம் வழங்கக்கோரி தனியார் தண்ணீர் லாரிகள் வரும் 27ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.
தட்டுப்பாடு அதிகரிக்கும்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். தனியார் தண்ணீர் லாரிகளின் போராட்ட அறிவிப்பால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை
தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் மேற்கொண்டால் சென்னையில் தண்ணீர் பஞ்சம் உச்சத்தை அடையும் என்பது உறுதி. இதனால் பீதியடைந்துள்ள மக்கள் வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.