சென்னையில் தண்ணீரை திருடும் தனியார் லாரிகள்.. தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை!
சென்னை: சென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் தண்ணீரை திருடி விற்பதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான, செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் உள்ளிட்டவை வறண்டு போயுள்ளன.
போதாதற்கு வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி விட்டது. இதனால் சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
அமமுக கட்சி அல்ல.. அதிமுகவை விட்டு சென்ற சனி.. ஓபிஎஸ் விமர்சனம்
லாரிகளில் விநியோகம்
நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சென்னையில் குடிநீர் ஆழ் குழாய்களையும் கிணறுகளையும் தண்ணீர் தேவைக்காக பயன்படுத்தி வந்த மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் பெரும்பாலான குடியிருப்புகளில் டேங்கர் லாரிகள் மூலமே தண்ணீர் வாங்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
தண்ணீர் திருட்டு
நகர் பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு புறநகர் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் தண்ணீர் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தனியார் லாரிகள்
திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட பூவிருந்தவல்லி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் திருமழிசை, செந்நீர்குப்பம், மேப்பூர் ஆகிய பகுதிகளில் தனியார் லாரிகள் தண்ணீரை திருடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரை தனியார் தண்ணீர் லாரிகள் திருடுவதாக கூறப்படுகிறது.
கோரிக்கை
தனியார் லாரிகள் நிலத்தடி நீரை திருடி வணிக நோக்கில் விற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தண்ணீர் திருட்டை உடனே தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காத்திருப்பு
சென்னையின் பெரும்பாலான இடங்களில் தனியார் தண்ணீர் லாரிகள் மூலமாகவே தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஆன்லைனில் தண்ணீர் லாரிகளை புக்செய்து மாதக் கணக்கில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.