தலித் அரசியல்.. பா. ரஞ்சித் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு.. ஆபத்து என எச்சரிக்கை
Recommended Video
சென்னை: பட்டியலின கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ள கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவர், செ.கு.தமிழரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
பட்டியலின மக்கள் பிரச்சினைகளை சந்திக்கும் போது, அவர்களுக்கு ஆதரவாக, எம்பி, எம்எல்ஏக்கள், குரல் எழுப்ப முடியாமல் இருக்கிறார்கள். அப்படி குரல் எழுப்பினால் தங்கள் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்று பயப்படுகிறார்கள்.
வெளியே வாருங்கள்
குரல் எழுப்பினால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயப்படுபவர்கள் கட்சியில் இருந்து வெளியே வாருங்கள். நாங்கள் அவர்களை தேர்தலில் வெற்றி பெற வைக்கிறோம். குறைந்தபட்சம் லோக்சபா தனித்தொகுதிகளிலாவது பட்டியலின கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் அப்படியான கட்சிகளில் இருந்து மட்டுமே மக்களை எம்பிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ரவிக்குமார் கருத்து
ஆணவ கொலை குறித்து பெரிய கட்சிகளின் எம்.பி, எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பவில்லை. இவ்வாறு ரஞ்சித் தனது ஆதங்கத்தை பதிவு செய்கையில் கருத்தை முன் வைத்தார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் இந்த கருத்தை மறுக்கிறார்.
அணி திரட்டல்
ரவிக்குமார் கூறுகையில், இவ்வாறான அணிதிரட்டல் என்பது சனாதன தர்மவாதிகளின் நோக்கம் என்றும், ஜாதி ரீதியாக மக்கள் பிரிந்து இருப்பதுதான் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் நோக்கம். தலித்துகளை அணிதிரட்டுவதும் மூலமாக அவர்களின் நோக்கம் நிறைவேறிவிடும் என்று எச்சரிக்கிறார் ரவிக்குமார்.
மைய நீரோட்டம்
இது தொடர்பாக ட்விட்டரிலும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். ஏற்கனவே பாமக கட்சி, தலித் கட்சிகள் அல்லாத கூட்டணி என்ற ஒன்றை உருவாக்கியது. தலித்துகள் மீதான வன்கொடுமை அதன்பிறகு அதிகரித்ததாகவும் ரவிக்குமார் சுட்டிக்காட்டுகிறார். எனவே மைய நீரோட்டத்தில் இணைந்து உரிமைகளை மீட்டெடுப்பது தான் சரியான வழி, என்று ரவிக்குமார் தெரிவிக்கிறார்.