கவர்னருடன் எங்கே புகைப்படம், ஏன் மாணவிகளுக்கு அனுப்பினேன்... உண்மையை போட்டு உடைத்த நிர்மலாதேவி!
Recommended Video
சென்னை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாணவிகளுக்கு அனுப்பியது ஏன் என்று அருப்புக்கோட்டை உதவி பேராசிரியர் நிர்மலா தேவி சிபிசிஐடி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தனக்கு செல்வாக்கு இருப்பதை போல காட்டிக் கொள்ளவே மாணவிகளுக்கு கவர்னருடன் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.
கல்லூரி மாணவிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்து உதவி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள், யாருக்காக மாணவிகளிடம் பேசினார் பல விஷயங்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் நிர்மலாதேவி அளித்த வாக்குமூலங்கள் வெளியாகியுள்ளன.
அதில் மார்ச் 13-ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தங்குவதற்காக தேவையான உடைமைகளை எடுத்து கொண்டு செல்லும் போது அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருவதை தெரிந்து கொண்டு அங்கு சென்றதாக நிர்மலா தேவி கூறியுள்ளார். கவர்னர் வருகையையொட்டி மதுரை காமராஜர் பல்கலைகழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சிக்கு நானும் சென்றிருந்தேன்.
அடுத்த வாரம் "அசைன்மென்ட்".. கோட்வேர்ட் பயன்படுத்தி மாணவிகளை வளைக்கப் பார்த்த நிர்மலா தேவி!
ஆளுநரை சந்தித்தது எப்படி?
அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை முடித்து விட்டு திரும்பிய ஆளுநர் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக வந்திருந்தார். அவரை நேரில் காண வேண்டும் என்ற ஆவலில் நானும் கண்காட்சிக்கு சென்றேன். அவர் கண்காட்சியை திறந்து வைத்தபோது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தேன். ஆளுநருடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டேன்.
பல்கலைக்கழக நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம்
கவர்னர் வருகையின் போது எடுத்த வீடியோவை மூன்றாம் ஆண்டு மாணவிகள் 3 பேர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப் செய்தேன். எனது மகள் மற்றும் பேராசிரியர்கள் சிலருக்கும் வாட்ஸ்அப் மூலம் இவற்றை அனுப்பி வைத்திருந்தேன். எனக்கு ஆளுநரிடமே செல்வாக்கு இருப்பதாக மாணவிகளிடம் கூறி எனது காரியத்தை சாதிக்க புகைப்படங்களை அனுப்பினேன்.
ஏன் மாணவிகளுக்கு அனுப்பினேன்
ஆளுநருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பார்த்தால் மாணவிகள் எனக்கு பெரிய இடத்தின் தொடர்பு இருக்கிறது என்ற பயத்தில் நான் என்ன சொன்னாலும் செய்வார்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது தவறாகிவிட்டது.
செல்வாக்கை காட்ட
மாணவிகள் நான் சொன்னது எதையும் கேட்காமல் ஆடியோவை வெளியே கசியவிட்டுவிட்டனர். உரையாடலில் நான் பெரிய உயர் அதிகாரி என்று சொன்னது துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர்களை நினைத்து யூகத்தின் அடிப்படையிலேயே சொன்னேன். முருகனுக்கு துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோர் நெருக்கமாக இருப்பதோடு முருகனும், கருப்பசாமியும் கேட்டதின் பேரிலேயே மாணவிகளிடம் பேசியதால் இவர்கள் தான் உயர் அதிகாரிகளாக இருப்பார்கள் என்று நினைத்தே பேசினேன் என்றும் நிர்மலா தேவி கூறியுள்ளார்.