கஜா புயல்: திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நிவாரண உதவி
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாட்டிற்கே உணவு வழங்கிய தஞ்சை மண்டல மக்கள் இன்று தமக்கே உணவின்றி நிற்கும் அவலத்தைப் பார்க்கின்றோம். கஜா புயல் அந்த மக்களின் வாழ்வைப் புரட்டிப் போட்டுள்ளது. இந்நிலையில், மிகப்பெரும் உதவிகளைச் செய்ய நம்மால் இயலாது என்றாலும், இயன்றதைச் செய்வோம், இடைவிடாது செய்வோம் என்னும் அடிப்படையில், எங்கள் பேரவையின் சார்பில் நிதி திரட்டப்பட்டது.
பேரவையின் உறுப்பினர்கள், அம்மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் விதமாகத் தங்களால் இயன்ற தொகையினைக் கொடுத்தனர். அப்படித் திரண்ட 1,28,330 ரூபாயில், 171 அரிசி மூட்டைகள் வாங்கப்பட்டு, அவை, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா அவர்களின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.
பேரவையின் துணைப் பொதுச் செயலாளர்கள் சிங்கராயர், சிற்பி செல்வராஜ், மாநில இளைஞர் அணிச் செயலாளர் சந்தானம், புலவர் செல்லக் கலைவாணன், கவிஞர் புண்ணியமூர்த்தி, ஜெகன் ஆகிய அறுவரும் அரிசி மூட்டைகளைச் சட்டமன்ற உறுப்பினரிடம், 24.11.2018 காலை மன்னார்குடி சென்று ஒப்படைத்தனர் என்று தெரிவித்துள்ளார்.