குட்கா, பான் மசாலா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீடிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டிற்கு நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
என்ன தான் குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு தவறாமல் ஆண்டுதோறும் தடை விதிக்கப்பட்டாலும், உண்மை நிலவரம் என்னவென்று நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. குட்கா முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறினாலும், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை வழக்கம் போலவே தமிழகத்தில் ரகசியமாக தொடர்கிறது.
முன்னதாக உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய மெல்ல கூடிய புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதித்து கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அப்போது அவர் கூறியிருந்தார்.
குட்கா பான் மசாலா பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியது. இந்நிலையில் குடிமக்களுக்கு கேடு விளைவிக்கும் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை, முற்றிலும் தடை செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ரேண்டம் எண்ணை வெளியிட்டார் உயர் கல்வி அமைச்சர் அன்பழகன்
இந்த உத்தரவை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் கண்டிப்புடன் கூறியது. இந்நிலையில், பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் மீதான தடையை ஆண்டு தோறும் நீடித்து, தமிழக அரசு உத்தரவிட்டு வருகிறது.
கடந்த ஆண்டு குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மே 23-ம் தேதியுடன் முடிந்து விட்டது. இந்நிலையில் இன்று இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக அரசு, மாநிலத்தில் குட்கா பான் மசாலா பொருட்களை உற்பத்தி செய்ய கூடாது. அது போல அவற்றை சேமித்து வைக்கவும் கூடாது.
இந்த தடையை மீறி சட்டவிரோதமாக குட்கா பான் மசாலா பொருட்களை விற்பனை செய்ய கூடாது என கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் ஓராண்டு நீடிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாணை ஒன்றையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு இந்தாண்டு மே மாதம் 23-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.