குடிநீர் பஞ்சத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.. திமுக போராட்டம் அறிவிப்பு
சென்னை: குடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22ம் தேதி முதல் மாவட்டம் தோறும் போராட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: குடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தண்ணீர் பிரச்சனையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
உள்ளாட்சித் துறை அமைச்சரின் அக்கறையற்ற தன்மையால் மக்கள் குடிநீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் பஞ்சமே இல்லையென பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்புவதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க அமைச்சர் முயற்சி செய்கிறார்.
அமைச்சர் சொல்வது போல் நிலைமை இல்லை. தண்ணீர் பிரச்சனை தலை விரித்தாடுகிறது. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, ஒரு (சென்னை) இடத்தில் இருக்கும் தண்ணீர் பிரச்சனையை தமிழகம் முழுவதும் இருப்பது போல் மாயை ஏற்படுத்த வேண்டாம் என்றும், இன்னும் 3 மாத காலத்திற்கு நிலத்தடி நீரை எடுத்துதான் தர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
அதே நேரம், சென்னையில் மழையில்லாவிட்டாலும் கூடுதலாக தண்ணீரை வழங்கி வருகிறோம். தண்ணீர் பிரச்சனையால் தான் சென்னையில் ஓட்டல்களை மூடிவிட்டனர் என தவறான பரப்புரை செய்து வருகின்றனர் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் ஊராட்சி செயலாளர்கள் குடிநீர் பிரச்சனையை சரிவர கவனிக்காமல் செயற்க்கையான குடிநீர் பஞ்சத்தை உருவாக்கி அரசு மீது பழி போட நினைக்கிறார்கள் என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.