"அம்மா" இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா.. குமுறும் இடை நிலை ஆசிரியர்கள்
ஜெயலலிதா இருந்திருந்தால் எங்களுக்கு இது நடந்திருக்குமா என்று ஆசிரியர்கள் குமுறுகிறார்கள்
Recommended Video
சென்னை: இதுவே ஜெயலலிதா இருந்திருந்தால் எங்களை இப்படி விட்டிருப்பாங்களா என்று மனம் கொதிக்க கேட்கிறார்கள் போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள்!!
பொதுவாகவே ஆசிரியர்களை ஒரு உயரிய இடத்தில்தான் வைத்திருந்தார் ஜெயலலிதா. அவர்களுக்கான மரியாதையை எங்கேயும் எப்போதும் அவர் கொடுக்க தவறியதே இல்லை.
ஒரு கட்டத்தில் திமுகவை விட தன் ஆட்சி காலத்தில் நிறைய சலுகைகளை அவர்களுக்கு அளித்து அழகு பார்த்தவர் அவர்.
ஆசிரியர்கள் நியமனம்
முந்தைய திமுகவின் ஐந்தாண்டு காலத்தில், 55 ஆயிரத்து 69 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த முறை ஆட்சிக்கு வந்தபோது ஜெயலலிதா, மூன்று மாதங்களில் அதுவும் ஒரே வாரத்தில், 52 ஆயிரத்து 413 ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவிப்பு செய்து, புதிய சாதனையை படைத்தார்.
பட்ஜெட் தொடர்
அதேபோல, ஒவ்வொரு வருஷமும் பட்ஜெட்டின் போது, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில், ஆசிரியர்கள் நியமனம் என்றாலே 7,000, அல்லது 8,000 என்றுதான் நியமனம் என்று தான் அறிவிப்பு வரும். அப்படி இருக்கும்போது, இத்தனை ஆசிரியர்களை ஒரேயடியாக நியமித்தவர் ஜெயலலிதா.
பொங்கல் போனஸ்?
ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இதர கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுடைய சலுகைகளைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் பல அறிவிப்புகளை அமல்படுத்தினார். அவ்வளவு எதற்கு? பொங்கலுக்கு போனசாக ஆசிரியர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கியதற்கு எத்தனையோ எதிர்ப்புகளை சம்பாதித்தார் அவர்.
முதல்வர் சந்திக்கவில்லை
இன்று நிலைமையோ தலைகீழாக உள்ளது. பொங்கல் நெருங்கும் சமயத்தில் சந்தோஷத்தில் இருக்கும் ஆசிரியர்கள், இன்று பசி, பட்டினி, மயக்கம், போராட்டம் என சென்னையில் வீழ்ந்து கிடப்பது வேதனையை அளித்து வருகிறது. அதற்கேற்றார்போல், முதல்வர் பழனிசாமியும் அவர்களை நேரில் சந்திக்காமல் உள்ளார்.
பேச்சுவார்த்தை தோல்வி
முதல்வர் வராவிட்டாலும், போராட்ட மக்களை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனாவது நேரில் போய் சந்தித்து பேசி இருக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதுவும் தோல்வியில்தான் முடிகிறது.
பின்னடைவு
ஆனால் அரசு சார்பில் யாருமே போகாமல் இருப்பதும், அவர்களுக்கு ஆதரவு தராமல் இருப்பதும் அதிமுகவுக்கு மேலும் பின்னடைவைதான் கொடுக்கும் என்றே பலர் பகிரங்கமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதுவே ஜெயலலிதா இருந்திருந்தால் எங்களை இப்படி போராட விட்டிருப்பார்களா என்று ஆசிரியர்களே கொதித்து போய் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.