வன்முறையை தூண்டி விடுகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி... சென்னை போலீசில் புகார்
சென்னை: நாக்கை அறுக்க வேண்டும் என வன்முறையை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளதாக, அவர் மீது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெண் நிர்வாகி செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவரது நாக்கில் சனி. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊரில் சென்று அவர் பேசி உள்ளார் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.
அதே நேரம், இந்துக்கள் மனம் புண்படும் வகையில் பேசியதாக, கமல்ஹாசனுக்கு எதிராக இந்து சேனா எனும் அமைப்பு டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசன் மீது காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி காவல்நிலையத்தில், கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனுதாக்கல் செய்துள்ளார். கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனுவை நாளை விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசிய, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெண் நிர்வாகி பிரியதர்ஷினி செம்பியம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
பிரச்சாரத்தை ரத்து செய்தார் கமல்ஹாசன்... சட்ட வல்லுநர்களுடன் திடீர் ஆலோசனை
இதே போல், திருச்சி கண்டோன்ட்மென்ட் காவல் நிலையத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி, மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர் கிஷோர் குமார் உள்ளிட்டோர் புகார் அளித்துள்ளனர். இந்திய அரசிலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டு உள்ளது.