'பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பில் போவதில் பிரச்சினை இல்லை.. ஆனால்.. ' பிடிஆர் போட்ட ஒரே கண்டிஷன்
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கும் செஸ் வரியைக் கைவிட்டால் ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவது குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்யத் தயாராக உள்ளதாகத் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தீனதயாய் அந்தியோதயா யோஜனா திட்டத்தின் கீழ் 250 சாலையோர வியாபாரிகளுக்குத் தள்ளு வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
இதில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பயனாளிகளுக்குத் தள்ளுவண்டிகளை அளித்தார். மேலும், இதில் மதுரை எம்.பி சு வெங்கடேசனும் கலந்து கொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ''கடந்த 2018ஆம் ஆண்டிலேயே பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால், 2018 முதல் 2021 வரையிலான இடைப்பட்ட காலங்களில் பெட்ரொல், டீசல் விலை மற்றும் கச்சா எண்ணெய் விலையில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 130 டாலராக உயர்ந்தாலும் கூட பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள்ளேயே வைக்கப்பட்டது. அதையெல்லாம் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
வரி பகிர்வு
பாஜக ஆட்சி அமைக்கும் முன் இந்தியாவில் வசூலிக்கப்படும் ஒரு ரூபாய் வரி வசூலில் நேர்முக வரி 55 பைசாவாகவும், மறைமுக வரி 45 பைசாவாகவும் இருந்தது. ஆனால் பாஜக ஆட்சி அமைத்த பின்னர், பன்னாட்டு நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்க நேர்முக வரியை மத்திய பாஜக அரசு குறைத்தது. 2014இல் பாஜக ஆட்சிக்கு வரும் போது பெட்ரோல் மீதான வரி 10 ரூபாயாகவும், டீசல் மீதான வரி 5 ரூபாயாகவும் இருந்தது. ஆனால், இப்போது பெட்ரோல் வரி 32 ரூபாயாகவும் டீசல் வரி 31 ரூபாயாகவும் உள்ளது.
ஜிஎஸ்டி வரம்பு
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என ஒன்றும் மத்திய அரசு கூறவில்லை. இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கருத்தையே மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ளது. மத்திய அரசின் ஒட்டுமொத்த வரி வருவாயில் 20 சதவீதம் பெட்ரோல், டீசல் வழியாக வருகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசும் விரும்பவில்லை, மாநில அரசுகளும் விரும்பவில்லை.
Array
பன்னாட்டு நிறுவனங்களின் நலனிற்காக மத்திய அரசு வரிகளைக் குறைத்துள்ளதால், பொதுமக்களின் மீதான வரி சுமை இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் மட்டும் நேர்முக வரியில் 100 சதவீதத்தை மத்திய அரசே அரசே எடுத்துக்கொள்கிறது. மறைமுக வரியிலும் 70 முதல் 75% வரை மத்திய அரசுக்கே செல்கிறது. தற்போது இருக்கும் சூழலில் மாநிலங்களுக்கு பெட்ரொல், டீசல், ஆல்கஹால் ஆகிய இரு துறைகளில் இருந்து மட்டுமே வரி வருவாய் மட்டுமே கிடைக்கிறது.
செஸ் வரி
ஜிஎஸ்டி-க்கு முன்பு கூட மாநில அரசுகளுக்கு வரி விதிப்பதில் குறைந்தபட்ச உரிமை இருந்தது. ஆனால், ஜிஎஸ்டி-க்கு பிறகு மத்திய அரசு அந்த குறைந்தபட்ச உரிமையையும் பறித்துக் கொண்டது. இது மட்டுமின்றி செஸ் வரியையும் மத்திய அரசு மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்காமல் வைத்துள்ளது. மாநில அரசுகளின் வரி வருவாயை மத்திய அரசு எடுத்துக் கொண்டால் மாநிலங்களில் உள்ள அரசுகள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்?
ஒரு கண்டிஷன்
தமிழகத்தில் உள்ள கள சூழல் மாறும்போது, அதற்கேற்ப திமுகவின் நிலைப்பாடும் மாறும். பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கும் செஸ் வரியைக் கைவிட்டால் ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவது குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்யத் தயாராக உள்ளோம். அதாவது இந்த விஷயத்தில் எங்கள் நிபந்தனை ஒன்று மட்டுமே. பெட்ரோல் , டீசல் விலையில் செஸ் வரியைக் கைவிட்டால் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருகிறோம்'' என்று அவர் குறிப்பிட்டார்.