மத்திய அரசு ரூ 31.50 எடுத்துகிட்டு வெறும் ரூ1.40-ஐ மாநிலங்களுக்கு தருகிறது.. போட்டு தாக்கும் பிடிஆர்
சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வாய்ப்பில்லை என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில் திமுக அரசு எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. தமிழக அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 10 ஆக இருந்த வரியை ரூ 32.90 ஆக உயர்த்தியது ஒன்றிய அரசு. அதாவது 3 மடங்கு அதிகரித்துள்ளது. ரூ 32.90 வரியில் ரூ 31.50-ஐ ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கிறது. ரூ 1.40 மட்டுமே மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்குகிறது.
கொரோனா சிகிச்சைக்கான ஜிஎஸ்டி குறைப்பு போதுமானதல்ல.. மத்திய அரசிடம் மீண்டும் மல்லுக்கட்டிய பிடிஆர்!
வரி குறைப்பு
தற்போதைய பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வாய்ப்பில்லை. பெட்ரோல், டீசல் மூலம் தமிழகத்திற்கு வர வேண்டிய வருவாய் ரூ 336 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வரி பங்கீட்டில் அநீதி நடக்கிறது. தமிழகத்தில் ஒருவர் ரூ 1 வரி செலுத்தினால் 4 பைசா மட்டுமே தமிழகத்திற்கு வரி கிடைக்கிறது.
கூடுதல் வரி விதிப்பு
வரியை குறைத்தால் ஒன்றிய அரசின் கூடுதல் வரி விதிப்புக்கு ஆதரவாக மாறிவிடும். ரூ 98 க்கு விற்பனையாகும் பெட்ரோலில் ரூ 70 ஒன்றிய அரசுக்கும் உற்பத்தி செலவிற்கும் செல்கிறது. தமிழக அரசிற்கு பெட்ரோல் விலையில் ரூ 20 மட்டுமே கிடைக்கிறது.
திமுக ஆட்சியில் 3 முறை
2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 3 முறை பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது. அதிமுக அரசு கலால் வரியை உயர்த்திய போதே பெட்ரோல் விலை ரூ 100 ஐ எட்டும் என எச்சரித்தேன்.
விலை குறைவு
கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த போதிலும் ஒன்றிய அரசு அதிக வரி விதித்து வருகிறது. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை சரியாக தரவில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு மாநில உரிமை, வருவாய் ஒன்றிய அரசு பறிக்கிறது.
பின்பற்ற வேண்டும்
கூட்டாட்சி தத்துவத்தை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும். நாங்கள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என ஒன்றிய அரசு நினைக்கிறது. ஜிஎஸ்டியை மாற்றம் செய்வது குறித்து பல முறை அறிவுறுத்தியும் ஒன்ரிய அரசு கேட்கவில்லை. அதிமுக அரசு 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் வைத்துள்ளது.
ரூ 4 லட்சம் கோடி
ரூ 4 லட்சம் கோடி கடன் உள்ளதாக அதிமுக அரசு தவறாக சொல்லியுள்ளது. மாநிலங்களின் மீதான கடன் சுமையை ஒன்றிய அரசு அதிகரித்துவிட்டது. சுதந்திரம் அடைந்த பின்னர் பல ஒன்றிய அரசுகள் அமைந்துவிட்டன. தாங்கள்தான் முதல் அரசு என பாஜக நினைக்கக் கூடாது என பிடிஆர் பழனிவேல் தெரிவித்தார்.