பப்ஜிக்கு முழு ஆப்பு.. இன்று முதல் நிரந்தர தடை.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
சென்னை: இன்று முதல் பப்ஜி விளையாட்டுக்கு இந்தியாவில் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் இனி இந்தியாவில் யாரும் பப்ஜி விளையாட முடியாது. ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களும் இன்று முதல் விளையாட நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் மிக குறுகிய காலத்தில் அடிமையாக்கிய ஆன்லைன் விளையாட்டு என்றால் அது பப்ஜி (Player Unknown's Battle grounds -PUBG) தான்.
எந்த நேரம் பார்த்தாலும் பலர் ஸ்மார்ட்போனும் கையுமாக உலகத்தையே மறந்து பப்ஜி உலகத்திற்கு உள்ளே வாழ்ந்து வந்தார்கள். பப்ஜியை உலகம் முழுவதும் சுமார் 60 கோடி முறைகளுக்கும் மேல் சர்வதேச அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 5 கோடி பேர் தொடர்ந்து இந்த விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.
17.5 கோடி முறை
இதன் அதிகபட்சமான பதிவிறக்கங்கள் இந்தியாவிலிருந்துதான் வந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் பப்ஜி 17.5 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தது. இந்த வருடம் முதல் பாதியில் பப்ஜியின் சர்வதேச வருமானம் கிட்டத்தட்ட ரூ. 9,731 கோடியாக இருந்தது.
பப்ஜிக்கு தடை விதிக்க கோரிக்கை
சீனா ஜூன் மாதம் இந்திய எல்லையில் நடத்திய ஆக்கிரிமிப்பு மற்றும் வீரர்கள் மீதான தாக்குதல் காரணமாக, மத்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை ஜூன் மாதம் தடை செய்தது. அப்போது, பல குடும்பங்கள் பப்ஜியையும் தடை செய்ய வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பினர். எனினும் அரசு தடை செய்யவில்லை. அதற்குக் காரணம் அது முழுக்க சீன செயலி அல்ல. இந்த விளையாட்டை தென் கொரிய நிறுவனம் தான் உருவாக்கி நிர்வகித்து வந்தது.
மத்திய அரசு தடை
எனினும் அதன்பிறகு மத்திய அரசு மேலும் பல செயலிகளுக்கு தடை விதித்தது. அப்போது பப்ஜிக்கும் சேர்த்து தடை விதித்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி சீனாவின் செயலிகளுடன் சேர்த்து பப்ஜிக்கும் தடை விதித்தது. கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டு தளங்களிலிருமிருந்து பப்ஜி விளையாட்டை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, அந்நிறுவனங்கள் பப்ஜியை நீக்கின.
விளையாட முடியாது
இதனால் பப்ஜி விளையாட்டை செப்டம்பர் மாத துவக்கத்திற்கு பின்னர் இந்தியாவில் ஆண்ட்ராய்ட் யூசர்கள் ஆப்பிள் போன் யூசர்கள் என யாரும் அதிகாரபூர்வமாகப் பதிவிறக்கம் செய்ய முடியாது நிலை ஏற்பட்டது. அதே நேரம் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்து விளையாடி வருபவர்கள் மட்டும் தொடர்ந்து விளையாடி வந்தனர். ஆனால் அவர்களால் அப்டேட் செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களும் இன்று முதல் விளையாட நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
முற்றுப்புள்ளி சாத்தியமா
இதன் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்கள் விளையாடி வந்த பப்ஜிக்கும் இன்று முதல் முடிவுரை எழுதப்பட்டுள்ளது. இது பப்ஜி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அதேநேரம் பல குடும்பங்கள் சந்தோஷமாக உள்ளன. செல்போனே வாழ்கை என்று இனி இளைஞர்கள் இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறார்கள். எனினும் ப்ரி பயர் போன்ற வேறு சில கேம்களில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட தொடங்கி இருப்பதும் ,அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினம் என்றும் தோன்றுகிறது.