அரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா?
அரசின் உத்தரவுகளை பொதுமக்கள் எப்போதும் ஏற்று நடக்கவே செய்கிறார்கள்.
சென்னை: அரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா? என்பது நூற்றாண்டு சந்தேகமாக உள்ளது.
நம் நாட்டில் அரசாட்சி மீது மக்களுக்கு அன்றிலிருந்தே நம்பிக்கை இருந்து வருகிறது. அதனால்தான் எந்த ஒரு சின்ன அறிவிப்பு வந்தாலும் அதற்கு உடனடியாக கட்டுப்பட்டு விடுகிறார்கள்.
இதுவரை அரசு அறிவித்த எதற்குமே மக்கள் கீழ்ப்படியாமல் இருந்ததே கிடையாது. எல்லோரும் ஆதாரை பதிய வேண்டும் என்றார்கள், அதற்கு நாளையும் குறித்து கொடுத்தார்கள். நடைமுறை சிக்கல்கள் எவ்வளவோ ஏற்பட்டாலும், அதனை அந்நாளுக்குள் செய்து முடித்தார்கள்.
ஏடிஎம் வாசல்
ரூபாய் நோட்டு செல்லாது என்ற வந்தபோதும், இந்த தேதிக்குள் பழைய நோட்டுக்களை மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்தபோதும், அதற்கும் மக்கள் கட்டுப்படத்தான் செய்தார்கள். இதனால் எத்தனையோ பேர் ஏடிஎம் வாசலில் நிற்க முடியாமல் நின்று உயிரிழக்கவும் நேரிட்டது. ஆனாலும் மக்கள் அரசின் உத்தரவை மதித்தார்கள்.
மதித்து நடக்கிறார்கள்
இப்போதுகூட தமிழக அரசு பிளாஸ்டிக் வேண்டாம் என்று உத்தரவு போட்டது. உண்மையிலேயே நம் மக்கள் இதனை பெரிதாக மதித்து ஏற்று நடக்கிறார்கள். ஆளும் தரப்பு மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கதான் செய்கிறது. ஆனால் ஒரு நல்ல திட்டம் என்று வந்துவிட்டால், பிடிக்காத அரசு சொன்னாலும் அதனை மனமார ஏற்கிறார்கள். அதை விட முக்கியமாக அரசை விட படு வேகமாக மாற்றுகளைப் பற்றி சிந்தித்து அமல்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை.
கழுத்தை நெறிக்கின்றன
ஆனால் மக்களுக்கு தேவையானதை அரசு செய்கிறதா என்றுதான் தெரியவில்லை. எத்தனையோ பிரச்சனைகள் நம் தமிழகத்தில் சூழ்ந்துள்ளது. நல்ல உணவு இல்லை, வேலை இல்லை, ரோடு இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண் குழந்தைகளை நிம்மதியாக வளர்க்க முடியாத சூழல், இயற்கை வளங்கள் கொள்ளை என மாநிலத்தின் கழுத்தை நெறித்து கிடக்கிறது.
கீழ்படிகிறார்கள்
ஆர்டர் ஒன்றை போட்டுவிட்டால் படிக்காத பாமரர் கூட விழுந்தடித்து கீழ்படியும்போது, அவர்களுக்கு தேவையான சகாயங்களை எப்போதுதான் அரசு செய்து தரும்? எப்போதுதான் குறைவின்றி மக்களை வழிநடத்தும்? எப்பவுமே சட்டம் ஒரு கை ஓசையாகவே உள்ளது மக்களின் மனதை உறுத்திக் கொண்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பு எப்பவுமே ஒன்றே ஒன்றுதான்.
காலத்தின் கோலமா?
தங்களின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அது. அதை மட்டும் அரசுகள் தாங்களாகவே செய்ய முன்வந்தால் எத்தனை நன்றாக இருக்கும். ஆனால் இதுவரை அவையெல்லாம் கனவாகவே உள்ளதுதான் காலத்தின் கோலம்.