என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அத்துமீறி வீடு புகுந்து சிக்கிய போலீஸ்காரர்
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த போலீஸ்காரர் ஆயுதபடை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை: கையும் களவுமாக ஊர்ஜனங்களிடம் மாட்டி கொண்டாலும், விதவிதமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் போலீஸ்காரர் ஒருவர்!
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பகுதி புதுநல்லூர். இங்குள்ள காவல் சோதனைச் சாவடி போலீஸ்காரராக இருந்தவர்தான் பாலாஜி. வயது 38.
நேற்று காலை 6 மணி இருக்கும். அப்போது அதே பகுதியில் உள்ள நடராஜ் என்பவர் வீட்டுக்குள் திடீரென பாலாஜி யூனிபார்முடன் உள்ளே போய்விட்டார். அப்போது வீட்டில் நடராஜின் மகள்கள் உட்பட எல்லோருமே தூங்கி கொண்டிருந்தனர்.
துரத்தி வந்தனர்
சத்தம் கேட்டு விழித்த மகள்கள், போலீஸ்காரர் நின்று கொண்டு தங்களையே உற்று பார்த்து கொண்டிருப்பதை கண்டு அலறி துடித்து எழுந்து கூச்சலிட்டனர். இப்படி சத்தம் போட்டதும், போலீஸ்காரர் அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் அக்கம்பக்கத்தினர் எல்லோருமே பாலாஜியை துரத்தி கொண்டு வந்து அவரை முற்றுகையிட்டனர்.
யாரும் கேட்க முடியாது
"ரெண்டு பொம்பள பிள்ளைங்க இருக்கிற வீட்டில் எதுக்காக திடீர்னு உள்ளே வந்தீங்க?" என்று கேட்டனர். அதற்கு பாலாஜி, "நான் போலீஸ்காரன், எப்போ வேண்டுமானாலும், யார் வீட்டில வேணும்னாலும் நுழைவேன். அதையெல்லாம் நீங்க கேட்க முடியாது. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. வீடு திறந்திருந்தால், இப்படி தான் உள்ளே புகுந்து சோதனை போடுவேன்" என்றார்.
விரட்டி சென்றனர்
இந்த பதிலை கேட்டு ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாலாஜியை பிடித்து வெளுக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அடி தாங்க முடியாமல் அவர் அங்கிருந்து தப்பி, புதுநல்லூர் காவல் உதவி மையத்தில் ஒளிந்து கொண்டார். ஆனால் பொதுமக்கள் அங்கேயும் அவரை விரட்டி சென்றுவிட்டனர்.
பாலாஜி கைது
இதுகுறித்து தகவலறிந்து சோமங்கலம் போலீசாரும் அங்கே வந்துவிட்டனர். பொதுமக்களிடம் சமாதானம் பேசி பாலாஜியை மீட்டனர். அத்துமீறி நடந்து கொண்ட பாலாஜி மீது புகாரும் தரப்பட்டது. அதனடிப்படையில் போலீசார் பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
வித வித போட்டோக்கள்
போலீஸாரிடம் பாலாஜி ஒப்படைக்கப்பட்டபோது போட்டோக்களுக்கு விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தினார். பாலாஜிக்கு கொஞ்ச நாளாகவே குடும்ப பிரச்சனை இருக்கிறதாம், கடுமையான மன உளைச்சலில் தவித்து வருகிறாராம். அதனால் விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.பிறகு, பாலாஜியை ஆயுதப்படைக்கு மாற்றி ஸ்ரீபெரும்புதூர் ஏஎஸ்பி உத்தரவிட்டார்.