ஜெ.வுக்கு நினைவிடம் தாராளமாக வைங்க.. ஆனால் இங்கு கூடாது.. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
ஜெ.வீட்டை நினைவிடமாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
Recommended Video
சென்னை: போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம், அவரது நினைவில்லமாக மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
நினைவு இல்லமாக மாற்றிய பிறகு பொதுமக்கள் பார்வைக்கும் வேதா நிலையம் திறந்து விடப்படும் என்றும் சொன்னார். இதனையடுத்து அதற்கான பணிகளையும் தமிழக அரசு துவங்கியது.
டிடிவி - தீபா
வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்க்கட்சிகள் வரவேற்றாலும், அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தரப்பினர் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர்.
ஜெ.தீபா எதிர்ப்பு
"வேதா இல்லம் எங்கள் பூர்வீக சொத்து. இதனை வாங்கவோ, விற்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. இந்த இல்லத்திற்கு உரிமையானவர்களான எங்களுக்கு ஒரு நோட்டீஸ் கூட அனுப்பாமல் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதை எதிர்த்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பேன்" என்றார் தீபா.
வேதா இல்லம்
அதேபோல், "வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என சுயநலத்திற்காக அவசர கதியில் அறிவிக்கப்பட்டுள்ளது", என டி.டி.வி. தினகரனும் கூறியிருந்தார். இதனிடையே, இது சம்பந்தமாக பொதுமக்களிடமே கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.
போயஸ் கார்டன் மக்கள்
அதன்படி, இன்று சென்னையில் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடந்து வருகிறது. தேனாம்பேட்டை சமூக நலக்கூடத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், போயஸ் கார்டன் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, வேதா நிலையத்தை அரசுடமையாக்க அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் எதிர்ப்பு
குடியிருப்பு பகுதியில் இப்படி போயஸ் இல்லத்தை நினைவில்லமாக மாற்றி அமைத்தால் பல சிரமங்கள் ஏற்படும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். அந்த பகுதியில் வசித்து வரும் முதியவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று போயஸ் கார்டன் குடியிருப்பாளர்கள் கருத்து சொல்கிறார்கள்.
வேறு இடம்
மேலும் போயஸ் வீட்டை, நினைவிடமாக மாற்றினால், அங்கு நிறைய பேர் வந்து செல்வார்கள். இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படும். அமைதியான சூழல் நிலவிவருவது கண்டிப்பாக பாதிக்கப்பட்டு விடும். அதனால் வேறு இடத்தில் நினைவிடத்தை மாற்ற அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.