தமிழறிஞர் மன்னர் மன்னன் உடலுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி அஞ்சலி - உடல் நல்லடக்கம்
பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் உடலுக்கு முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.வைத்திக்குப்பத்தில் உள்ள பாவேந்தர் நினைவிடத்தில் மன்னர் மன்னன் உடல் நல்லடக்கம்
சென்னை: பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மறைந்த தமிழறிஞர் மன்னர் மன்னன் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள்,சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் மன்னர் மன்னன் உடல் வைத்திக்குப்பத்தில் உள்ள பாவேந்தர் நினைவிடத்தில் மன்னர் மன்னனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மைந்தரும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி அவர்கள் வயது முதிர்வு காரணமாக நேற்று புதுச்சேரி கதிர்காமம் காந்திநகர் இல்லத்தில் நேற்று பிற்பகலில் காலமானார். அவருக்கு வயது 92.
மன்னர் மன்னன் அவர்களின் இயற்பெயர் கோபதி ஆகும். இவர் பிறந்த நாள் 03.11.1928. தந்தையார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தாயார் திருவாட்டி.பழநியம்மா. உடன்பிறந்தோர் சரசுவதி, வசந்தா, இரமணி. பிரெஞ்சுமொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். மன்னர்மன்னன் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் சாவித்திரி அம்மையார் ஆவார். இவர்களுக்கு செல்வம், தென்னவன், பாரதி என்ற ஆண்மக்களும், அமுதவல்லி என்ற மகளும் உண்டு.
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் காலமானார்
மறைந்த மன்னர் மன்னன் உடல் காலை 11 மணியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக பெருமாள் கோயில் வீதியில் உள்ள பாவேந்தர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர். தொடர்ந்து தமிழ் அறிஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் மன்னர் மன்னன் உடல் வைத்திக்குப்பத்தில் உள்ள பாவேந்தர் நினைவிடத்தில் மன்னர் மன்னனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.