புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா உறுதி.. சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் நடந்த முடிந்த சட்டசபைத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று முன்தினம் (மே 7) புதுவை முதல்வராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், அவர் கடந்த இரண்டு நாட்களாகவே சோர்வாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சிகிச்சைக்காக அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் தான், அவர் புதுவை முதல்வராகப் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நேற்று முன்தினம் ரங்கசாமி மட்டுமே புதுவை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் வேறு யாரும் அமைச்சர்களாகப் பதவியேற்கவில்லை. இன்னும் சில தினங்களில் அவரது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.