திமுக - காங் கூட்டணியில் விரிசலா?.. யார் சொன்னது?.. ஸ்டிராங்கா இருக்கோம்.. புதுவை முதல்வர்
சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் தொகுதிகளை ஒதுக்காதது குறித்து திமுகவை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டிருந்தது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் ஸ்டாலின் கோபத்தில் உள்ளது குறித்து அறிந்த சோனியா காந்தி, கே எஸ் அழகிரியை அழைத்து விளக்கம் கேட்டார். மேலும் ஸ்டாலினை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுமாறும் முடிந்தால் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்குமாறும் கே எஸ் அழகிரிக்கு சோனியா அறிவுறுத்தினார்.
அண்ணா அறிவாலயம்
இதையடுத்து கே எஸ் அழகிரி தனது பேட்டி மூலம் சமாதானப்படுத்த முயன்றும் திமுக சமாதானம் ஆகவில்லை என்றே தெரிகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமானவரும் புதுவை முதல்வருமான நாராயணசாமி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.
அதிகாரப்பலம்
இந்த சந்திப்புக்கு பிறகு நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்துகளை கூறினேன். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனது பணப்பலம், அதிகாரப்பலத்தை கொண்டு அதிகாரிகளை மிரட்டியது.
விரிசல் இல்லை
அதையும் மீறி திமுக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றதற்கு ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறினேன். திமுக -காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா, உங்களுக்கு யார் சொன்னது? அதெல்லாம் கிடையாது.
கூட்டணி தொடரும்
தமிழகம், புதுவையில் திமுக- காங் கூட்டணி வலுவாக உள்ளது. 2021-இல் நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றார் நாராயணசாமி. இந்த நிலையில் 12 மணிக்கு கே எஸ் அழகிரியும் ஸ்டாலினை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.