கல்வெட்டு ரவி, கஞ்சா அஞ்சலை வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா,புதுவை பெண்தாதா எழிலரசி பாஜகவில் ஐக்கியம்
சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் ரவுடிகள் இணைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண் தாதா எழிலரசி ஆகியோரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.
பாரதிய ஜனதாவில் தமிழகம், புதுவை ரவுடிகள் அதிக எண்ணிக்கையில் இணைவது சர்ச்சையாகி வருகிறது. சேலத்தில் 5 முறை குண்டர் சட்டத்தில் கைதான ரவுடி முரளிக்கு தமிழக பாஜகவில் இளைஞரணியில் பொறுப்பு வழங்கப்பட்டது.
வடசென்னையை கலக்கிய ரவுடி கல்வெட்டு ரவியும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார். கல்வெட்டு ரவி மீது 6 முறை குண்டர் சட்டம் பாய்ந்தது. 6 படுகொலை வழக்குகளில் தொடர்புடையவர் கல்வெட்டு ரவி. இதேபோல் சென்னை சூர்யா என்ற ரவுடியும் பாஜகவில் இணைந்தார்.
வடசென்னை கஞ்சா வியாபாரியாக வலம் வந்த புளியந்தோப்பு அஞ்சலைக்கும் பாஜக அடைக்கலம் கொடுத்தது. அவர் வடசென்னை மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளராகி உள்ளார். புளியந்தோப்பு அஞ்சலை கொலை உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இடைவிடாத சசிகலா பேச்சு... டெல்லியில் பாஜக கொடுத்த ஷாக் அப்படியாம்!
சென்னை அருகே வண்டலூரில் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ரவுடிகள் கும்பல், போலீசாரை கண்டு தலைதெறிக்க ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வரிசையில் தற்போது பல கொலை வழக்குகளில் சிறைக்கு போன சீர்காழி ரவுடி சத்யா பாஜகவில் இணைந்துள்ளார்.
அதேபோல் புதுச்சேரியை மிரளவைத்து கொண்டிருக்கும் பெண் தாதா எழிலரசியும் பாஜகவில் இணைந்துள்ளார். புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவகுமார் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளி எழிலரசிதான். சமூக சேவகி என்ற அடையாளத்துடன் வலம் வரும் தாதா எழிலரசி இப்போது பாஜக பிரமுகராகிவிட்டார். புதுச்சேரி ரவுடிகளான சோழ, விக்கி, பாம்வேலு ஆகியோர் ஏற்கனவே பாஜகவில் இணைந்து பதவிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.