மீண்டும் ஒரு சிறுமி.. ரத்த காயங்களுடன் குளத்தில் சடலமாக.. அதிர்ச்சியாக உள்ளது.. முக ஸ்டாலின் வேதனை
புதுக்கோட்டை சிறுமி கொலை செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: "இதே புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் சில வாரங்களுக்கு முன்பு, சிறுமி படுகொலைக்குள்ளானது தாமதமாக வெளியே தெரிந்தது.. இப்போது மீண்டும் ஒரு சிறுமி.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் வறண்ட குளத்திலிருந்து உடல் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது.. பெண்கள் - சிறுமிகள் - பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறை காட்டிட வேண்டும்" என்று 7 வயது சிறுமி படுகொலை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது ஏம்பல் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்த ஒரு தம்பதியரின் 7 வயது மகள் ஜெயப்பிரியா, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தாள்.
ஆனால் திடீரென மாயமாகிவிடவும், அவரை தேட ஆரம்பித்தனர். அப்போதுதான், அங்கிருந்த கண்மாயில் பிணமாக கண்டெடுக்கப்பட்டாள். அவள் உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன. இதையடுத்து நடந்த விசாரணையில், குழந்தையை பலாத்காரம் செய்து, கொலையும் செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.. ஜெயப்பிரியா மரணத்திற்கு நீதி கேட்டு இணையத்தில் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.. இது என்ன நாடா இல்ல காடா என்று மக்கள் ஆவேசத்துடன் அந்த ஹேஷ்டேக்கில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து நடந்த பெண்சிசு கொலைகள் ஆகட்டும், விழுப்புரம் ஜெயஸ்ரீயை எரித்து கொன்றதாகட்டும், புதுக்கோட்டை தைல மரக்காட்டில் 13 வயது சிறுமியை அடித்து கொன்றதாகட்டும், ஒவ்வொரு பெண் குழந்தைகளின் கொடூர சம்பவத்துக்கும் கொந்தளித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்.
7 வயது ஜெயப்பிரியா.. தொடையெல்லாம் காயம்.. இது நாடு தானா?.. கொதிக்கும் மக்கள்: #JusticeforJayapriya
அதன்படியே இப்போதும் ஜெயப்பிரியா கொலை குறித்து கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்: "கொரோனா பரவலைப் போலவே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குச் சீர்கேடும் படுவேகமாகப் பரவி வருவது கவலையடையச் செய்கிறது!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயதுச் சிறுமியின் உடல், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், இரத்தக் காயங்களுடன் வறண்ட குளம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
ஜூன் 29-ம் தேதி மாலையில் விளையாடச் சென்ற சிறுமி, இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவரது பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் தேடியலைந்து ஜூலை 2-ம் தேதி காலையில் உயிரற்ற உடலினை கண்டெடுத்துள்ளார்கள். ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்புதான், இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்றொரு சிறுமி படுகொலைக்குள்ளானது தாமதமாக வெளியே தெரிய வந்தது. இப்போது மீண்டும் ஒரு சிறுமி! இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
பெண்கள் - சிறுமிகள் - பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறை காட்டிட வேண்டும்; இத்தகைய கொடூரங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்