புல்வாமா தாக்குதல்... மனிதநேய மக்கள் கட்சி... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
சென்னை: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் மனிதாபிமானமற்ற மாபாதகச் செயல் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மது விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த கொடும் தாக்குதலை யார் செய்திருந்தாலும் அவர்களை சட்டத்தின் படி தண்டிக்க வேண்டும். மனித உயிர்களின் மதிப்புத் தெரியாத மிருகங்களின் கொடூர செயலாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் இதுபோன்ற தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்துவார்கள் என்று உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தும் அது குறித்து முன்னெரிச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் நடந்து கொண்ட மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
சவால்
தாக்குதல் குறித்து எச்சரிக்கை எழுப்பியும் அதை தடுக்க முயற்சிக்காத மத்திய அரசின் செயல் மக்கள் மத்தியில் சந்தேகத்தைக் கிளப்பும் வகையிலேயே உள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கே சவால் விடும் இதுபோன்ற செயல்கள் இனி நடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேண்டுகோள்
இந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகம் மதிக்கத்தக்கது. அந்த வீரர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கும், இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ள வீரர்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
மேலும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், "பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்.வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுப்பதே.காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம்பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் " என தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி
இதே போல், காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: இந்த தாக்குதலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேவுள்ள சிவலப்பேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படை வீரர் சுப்பிரமணியனும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசந்திரன் உள்ளிட்ட 38 வீரர்கள் உயிரிழந்து விட்ட செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
சட்டத்தின் மூலம் தண்டனை
இந்த கொடுர தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அனைவரின் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை விரைவில் கண்டுப்பிடித்து அவர்களை சட்டத்தின் மூலம் தண்டனை பெற செய்ய மத்திய மற்றும் காஷ்மீர் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை பெரும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட வேண்டும்.என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.