பிரஸ்மீட்டில் கிருஷ்ணசாமி சாதி குறிப்பிட்டு அப்படி பேசியிருக்கக்கூடாது.. திருமாவளவன் வேதனை
சென்னை: சாதி பெயரை சுட்டிக்காட்டி கிருஷ்ணசாமி பேசியது வருத்தமும் வேதனையும் அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி கருத்து தெரிவித்து உள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணி சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் தனுஷ்குமாரிடம் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை கிருஷ்ணசாமி செய்தியார்களை சந்தித்து பேசினார். அப்போது தனக்காக வாக்கு கேட்ட கூட்டணி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் ஏன் உங்கள் கட்சியை தென்காசி மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்
அப்போது கிருஷ்ணசாமிக்கும், அந்த செய்தியாளருக்கும் நடுவே, வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கிருஷ்ணசாமி, அந்த பையன் எப்போதும் இப்படித்தான் கேக்குறான். இவனுக்கு எப்போதும் இதே நோக்கம் என்ற கிருஷ்ணசாமி, அந்த நிருபரை பார்த்து, உனக்கு எந்த ஊரு என கேள்வி எழுப்பினார். அதற்கு செய்தியாளர் ராம்நாடு என்று, பதில் சொல்கிறார். இதையடுத்து, நீ என்ன ஜாதி என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்புகிறார். இதனால் பிரஸ் மீட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சாதி பெயரை சுட்டிக்காட்டி கிருஷ்ணசாமி பேசியது வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. நான் உள்பட கட்சி தலைவர்கள் சாதி பெயரை குறிப்பிட்டு பேசினால் அது தவறு தான். சாதிய மதவாத சக்திகளை தமிழக மக்கள் தோல்வி அடைய வைத்துள்ளனர். சிதம்பரத்தில் நான் அங்கும் அங்குலமாக வென்றுள்ளேன், ஒவ்வொரு வாக்கும் முக்கியம்" இவ்வாறு கூறினார்.