அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம் கட்சி.. ஒரு தொகுதி ஒதுக்கீடு!
Recommended Video
சென்னை: அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நடுவே இன்று அதிமுக தலைமையகத்தில் உடன்படிக்கை கையெழுத்தானது.
இன்று காலை சுமார் 11.30 மணியளவில், அதிமுக தலைமையகத்திற்கு, கிருஷ்ணசாமி வருகை தந்தார். அங்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் தலைமையிலான நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
இதையடுத்து, 2019ம் ஆண்டு, லோக்சபா தேர்தல் உடன்படிக்கை கையெழுத்தானது.
பின்னர் நிருபர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் அதிமுக, புதிய தமிழகம் கட்சிகள் கூட்டணி அமைத்து தமிழகம், புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக, புதிய தமிழகம் கட்சிக்கும் நடுவே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அதிமுக தலைமையிலான இக்கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு லோக்சபா தொகுதி ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியிலிருந்து நாங்கள் விலகியதற்கு காரணம் பாமக.. பாரிவேந்தர் பரபர பேட்டி
21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி, அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
கிருஷ்ணசாமி பேசுகையில் கூறியதாவது: 2019ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் தேசிய அளவில், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும், மாநில அளவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையிலான, அதிமுக தலைமையில் அமைந்துள்ள மகத்தான வெற்றிக் கூட்டணியிலும், புதிய தமிழகம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
21 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், புதிய தமிழகம் கட்சி, தனது முழு ஆதரவையும், அதிமுக வேட்பாளர்களுக்கு அளிக்கும். எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள லோக்சபா தொகுதியில், புதிய தமிழகம் கட்சி எங்களுடைய தனிச் சின்னத்திலேயே போட்டியிடும். எனது சமுதாயம் சார்ந்த, 90 ஆண்டுகால, கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது மிகப்பெரிய அளவில் தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.