நீ எந்த ஊரு.. என்ன ஜாதி.. நிருபரை பார்த்து கேட்ட கிருஷ்ணசாமி.. பிரஸ்மீட்டில் கொந்தளிப்பு
Recommended Video
சென்னை: செய்தியாளர் சந்திப்பில், நிருபரை பார்த்து, நீ எந்த ஊரு, என்ன பேரு என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும், அவரது உதவியாளர்கள், நிருபர்களை நோக்கி பாய்ந்த விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி தொகுதியில், பாஜக-அதிமுக கூட்டணியில் களமிறங்கியவர் கிருஷ்ணசாமி. ஆனால், திமுகவின், தனுஷ் குமாரிடம் கிருஷ்ணசாமி தோல்வியை தழுவினார். தனுஷ்குமார் 4,76,156 வாக்குகளை பெற்ற நிலையில், கிருஷ்ணசாமி 3,55,870 வாக்குகளை பெற்றார். மேலும் 28 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக, திமுக தென்காசி தொகுதியை வென்று சாதனைபடைத்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்தார் கிருஷ்ணசாமி. அப்போது தேர்தல் தோல்விகள் தொடர்பாகவும், சரமாரியாக கேள்விகள் எழுந்தன.
ஆந்திராவில் 163 எம்.எல்.ஏக்கள் கோடீஸ்வரர்கள்... ஜெகன்மோகன் ரெட்டிக்கு 2 வது இடம்
நன்றி சொல்கிறேன்
கிருஷ்ணசாமி கூறியதாவது: எனக்காக வாக்கு சேகரித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பிரேமலதா விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றி வாய்ப்பை இழந்தாலும், கூட்டணி கட்சி தலைவர்கள், சோர்ந்து போகக் கூடாது.
புது சகாப்தம்
தமிழகத்தில் 2021 வரை, எடப்பாடி பழனிச்சாமி அரசை நிம்மதியாக ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். சுதந்திரம் வழங்க வேண்டியது அவசியம். 2021ல் புதிய தமிழகம் புது சகாப்தத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும். அதற்காக மாநிலம் முழுக்க கிராமங்கள் தோறும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாக்குவாதம்
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், ஏன் உங்கள் கட்சியை தென்காசி மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். அப்போது கிருஷ்ணசாமிக்கும், அந்த நிருபருக்கும் நடுவே, வாக்குவாதம் ஏற்பட்டது. "ஒரு கிருஷ்ணசாமியா தோத்தாரு.. 38 பேரு தோத்துருக்கோம்ங்க. அளவோடு பேசு" என்றார் கிருஷ்ணசாமி.
ஜாதி என்ன
பதிலுக்கு அந்த நிருபர், "கிருஷ்ணசாமி சார் தோத்துருக்கார். நீங்க ஏன் தோத்தீங்கன்னு உங்ககிட்டதான் சார் கேட்க முடியும்" என்றார். பதிலுக்கு கிருஷ்ணசாமி, "ஏம்ப்பா நீ இப்படி பேசுற. சொல்றத கேளு.. உனக்கு ஏம்ப்பா இவ்வளவு? ஏய்" என்றார். அப்போது அந்த நிருபர், ஏய்லாம் சொல்ல கூடாது என பதிலுக்கு கத்தினார்.
இதையடுத்து நிருபர்களை பார்த்த கிருஷ்ணசாமி, அந்த பையன் எப்போதும் இப்படித்தான் கேக்குறான். இவனுக்கு எப்போதும் இதே நோக்கம் என்ற கிருஷ்ணசாமி, அந்த நிருபரை பார்த்து, உனக்கு எந்த ஊரு என கேள்வி எழுப்பினார். அதற்கு நிருபர் ராம்நாடு என்று, பதில் சொல்கிறார். இதையடுத்து, நீ என்ன ஜாதி என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்புகிறார். இதனால் பிரஸ் மீட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
தெருவை கூட கேட்பேன்
நிருபர்கள், கிருஷ்ணசாமியை சூழ்ந்து கொண்டு, ஜாதி பெயரையெல்லாம் எப்படி கேட்கலாம் என்று வாக்குவாதம் செய்தனர். அப்போது, கிருஷ்ணசாமி கட்சிக்காரர் ஒருவர், நிருபர்களை நோக்கி பாய்ந்து வந்தார். அவரை சிலர் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர். கிருஷ்ணசாமி மேலும் தொடர்ந்து பேசுகையில், ஜாதி அடிப்படையில்தான் அவன் கேள்வி கேட்கிறான். நீ மனுஷனாவே கேள்வி கேட்கவில்லை. அவனுக்கு என்ன நோக்கம் என்று தெரிய வேண்டுமல்லா? என்ன தெரு என்று கூட கேட்பேன். இவ்வாறு கிருஷ்ணசாமி ஆவேசமாக கூறினார். இவ்வாறு பிரஸ் மீட் பெரும் அமளி துமளி நடுவே முடிவுக்கு வந்தது.
|
மீடியாக்கள் மீது பாய்ச்சல்
முன்னதாக நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, தமிழக, மீடியாக்களைத்தான் கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழக பிரஸ் எப்போதும் நெகட்டிவ் செய்திகளை போட்டு தமிழகத்தை குட்டிச் சுவராக்கிவிட்டீர்கள். நீங்கதான் தமிழகத்துக்கு பெரும் கேடு விளைவித்துள்ளீர்கள். ஜல்லிக்கட்டு நடக்க மோடி அனுமதி வாங்கி கொடுத்தார். என்றாவது பிரஸ் மூலம் நன்றி சொன்னீர்களா. ஓ.பன்னீர் செல்வம், டெல்லியில் முகாமிட்டு மூன்றே நாளில் 3 துறைகளில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்தார். அதை மீடியாக்கள் பாராட்டவேயில்லை. மீடியாக்கள், சமூக ஊடகங்களின் நெகட்டிவ் பிரச்சாரத்தால்தான் தமிழகம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார்.