டாக்டர் கிருஷ்ணசாமி பெயரில் வெளியான அறிக்கை போலியானது.. மகன் விளக்கம்
சென்னை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பெயரில் அவரது லெட்டர் ஹெட் பேப்பரில் வெளியான கடிதம் போலியானது என்று தெரிய வந்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருவர். தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வரும் டாக்டர் கிருஷ்ணசாமியின் லெட்டர் ஹெட் பேப்பரில் இன்று திடீரென ஒரு அறிக்கை வெளியானது.
அதில் இடம் பெற்றிருந்த வாசகம்தான் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ஆனால் தற்போது அது போலியானது என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி நமக்கு அனுப்பியுள்ள தகவலில், இது போலியானது, அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் வெளியிட்டுள்ளனர். திரித்து வெளியிடப்பட்ட புகைப்படம் இது. தவறான உள்நோக்கத்துடன் இதை வெளியிட்டுள்ளனர் என்று விளக்கம் அளித்துள்ளார்.
நமது தளத்திலும் இதுதொடர்பான செய்தி வெளியாகியிருந்தது. தற்போது இது தவறான செய்தி என்று தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து அதை நீக்கியுள்ளோம். தவறுக்கு வருந்துகிறோம்.