அதிமுக-புதிய தமிழகம் கூட்டணி முறிந்தது.. இடைத் தேர்தலில் ஆதரவு இல்லை.. கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி
Recommended Video
சென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு, புதிய தமிழகம் ஆதரவு அளிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த லோக்சபா தேர்தலில், அதிமுக-பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் இணைந்திருந்தது. தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். ஆனால் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், அதிமுக உடன் புதிய தமிழகத்தின் கூட்டணி இன்று முடிவுக்கு வந்து விட்டது. இது தொடர்பாக சென்னையில் கிருஷ்ணசாமி இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும், இதுதொடர்பாக அரசாணை வெளியிட வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் 2010ல் கோரிக்கை வைத்தோம். அவர் அதை மறந்து விட்டார். 2012 சங்கரன்கோவில் இடைத் தேர்தலின்போது இரண்டு அமைச்சர்களை அனுப்பி வைத்து, இடைத்தேர்தல் முடிந்ததும் இந்த கோரிக்கையை நிறைவேற்றி தருகிறேன் என்று தெரிவித்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
இப்போது லோக்சபா தேர்தலுக்கு முன்பாக சில கோரிக்கைகளை முன்வைத்து அதிமுகவுடன், கூட்டணி சேர்ந்தோம். ஆனால் அந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தேவேந்திரகுல வேளாளர் குறித்த கோரிக்கையை அதிமுக நிறைவேற்றாததால், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளோம், என்று தெரிவித்தார்.
டாக்டர் கிருஷ்ணசாமி, அண்மைக்காலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். 7 ஜாதி பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரி தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தார் கிருஷ்ணசாமி. ஆனால் அது நடக்காததால்தான், கூட்டணியை விட்டு அவர் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதையும், கூட்டணியை விட்டு புதிய தமிழகம் வெளியேற வாய்ப்பு இருப்பதையும் 'ஒன்இந்தியாதமிழ்' 2 நாட்களுக்கு முன்பே செய்தியாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.