நாளை 10,000 இடங்களில் உண்ணாவிரதப் போர்... புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அறிவிப்பு..!
சென்னை: தேவேந்திர குல வேளாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் நாளை 10,000 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தேவேந்திர குல வேளாளர்களை பட்டியலின பிரிவில் இருந்து மாற்றக்கோரி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வருகிறார் கிருஷ்ணசாமி. கடந்த மக்களவைத் தேர்தலின் போது கூட, மதுரை பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இது தொடர்பாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கியதாக தெரியவில்லை. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேவேந்திர குல வேளாளர்கள் கோரிக்கையை முன்னிறுத்தி மீண்டும் போராட்டங்களை தொடங்கியிருக்கிறார் கிருஷ்ணசாமி.
அந்தவகையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேவேந்திர குல வேளாளர்கள் வசிக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் பெருமளவில் திரண்டு பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
கோட்டையில் ஈபிஎஸ் அணி... முதல்வருடன் 6 அமைச்சர்கள் தீவிர ஆலோசனை.. 'உளவாளி'கள் களையெடுப்பா?
சென்னை அல்லது கோவையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே வரும் தேர்தலில் ஆதரவு என்ற நிலைப்பாட்டையும் அவர் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.