"வேண்டா வெறுப்புக்கு பிள்ளை பெற்று காண்டாமிருகம்னு பேருவச்ச மாதிரி.." கே.எல் ராகுல் டீமுக்கு தேவையா?
சென்னை: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு கேஎல் ராகுல் இந்திய டாப் 3 வரிசையில் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாப் வரிசையில் ஹிட்டர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு விராட் கோலி, ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், பாண்டியா, அக்சர் படேல் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக பங்களித்துள்ளனர். இதன் மூலம் தொடர்ந்து 10வது முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
ஆனால் இந்தத் தொடர் சாதனை படைப்பதற்கோ, ரசிகர்களுக்காகவோ விளையாடப்பட்டது அல்ல. இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கு இந்திய அணியை தயார்படுத்துவதற்காக விளையாடப்பட்டது. ஆனால் முதல் போட்டியில் உலகக்கோப்பைத் தொடருக்கே தேர்வாகாத உமேஷ் யாதவ் விளையாடியது ரோஹித் ஷர்மாவின் தலைமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
தீப்தி ஷர்மாவின் ஒற்றை சம்பவம்.. தூக்கத்தை இழந்த இங்கிலாந்து.. இந்திய ரசிகர்களின் தெறிக்கும் மீம்ஸ்!
டாப் 3 வீரர்களின் பிரச்சினை
அதேபோல் காயம் காரணமாக ஜடேஜா அணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், அவரது இடத்திற்கு அக்சர் படேலை கொண்டு வந்து பரிசோதனை செய்தது சரி என்றாலும், இந்திய அணி பேட்டிங் வரிசையில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாமல் பெரும் பிரச்சினை தான். அதுமட்டுமல்லாமல், டாப் ஆர்டரில் விளையாடும் கேஎல் ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகிய மூவருக்குமே இடதுகை பந்துவீச்சாளர்கள் என்றால் சுத்தமாக விளையாட்டை மறந்துவிடுவார்கள்.
பென்ச்சில் ரிஷப் பண்ட்
இதனை ஏற்கனவே பல்வேறு முறை பார்த்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பைத் தொடர் நடைபெறுவது ஆஸ்திரேலியா என்பதை சிந்தித்து பார்த்தால், டாப் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனின் தேவை நிச்சயம் இருக்கும். ஆனால் நடந்துமுடிந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியில் இருக்கும் ஒரே இடதுகை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டை வெளியில் அமர வைத்து வேடிக்கை தான் பார்க்க வைத்தது.
ஹிட்டர்கள் இல்லாத இந்திய அணி
அதேபோல் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ப, ஒவ்வொரு சர்வதேச அணியின் டாப் 3 பேட்டிங் வரிசையில் ஒரு ஹிட்டரை , பெரும்பாலும் இடதுகை பேட்ஸ்மேன்களை வைத்தே விளையாடி வருகிறது. ஆனால் இந்திய அணியில் ஹிட்டர் என்று பார்த்தால் ஹர்திக் பாண்டியா மட்டுமே இருக்கிறார். இதுதான் இந்திய அணிக்கு உலகக்கோப்பைத் தொடரில் சவாலாக இருக்கப் போகிறது.
கேஎல் ராகுல் பாணி எடுபடுமா?
அதேபோல் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகிய இருவரில் ஒருவர் 20 ஓவர்களும் ஆட வேண்டும் என்பதே இந்திய அணியின் திட்டமாக உள்ளது. ஆனால் முதல் விக்கெட்டாக ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தால், கேஎல் ராகுல் - விராட் கோலி இருவரும் நிதானித்து தேவைக்கேற்ப அதிரடியாக ஆடக் கூடியவர்கள். இவர்களின் ஆட்டத்தால் பின் வரிசை வீரர்களுக்கு ப்ரஷர் ஏற்படும் என்பதோடு, ரன் ரேட் குறையும் என்பதே முக்கிய பிரச்சினையாக உள்ளது.
3வது வீரராக சூர்யகுமார்
இதனால் ரோஹித், கேஎல் ராகுல் ஆகியோரில் யார் முதலில் ஆட்டமிழக்கிறார்கள் என்பதை பொறுத்து சூர்யகுமார் யாதவை களமிறக்க வேண்டும். இன்னொரு முறையையும் பின்பற்றலாம். ஆனால் இந்திய அணி அந்த பரிசோதனையை கைவிட்டு வெகுநாட்களாகிவிட்டது. தினேஷ் கார்த்திக்கை அணியில் பேக் அப் வீரராக வைத்துக்கொண்டு, கேஎல் ராகுலை 5ம் நிலை வீரராக களமிறக்கலாம். ரோஹித் ஷர்மா - கோலி இணை தொடக்க வீரர்களாக களமிறங்கும் பட்சத்தில் ரன் ரேட்டை சீராக எடுத்துச் செல்ல இது உதவியாக இருக்கும். ஆனால் கேஎல் ராகுலை ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவே இந்திய அணி கணக்கில் எடுத்துள்ளது.
உலகக்கோப்பையில் பிரச்சினை
உலகின் அனைத்து சர்வதேச அணிகளோடு இந்திய அணியை ஒப்பிட்டு பார்த்தாலும், இந்திய அணி வலுவானதாகவே தெரியும். ஆனால் காம்பினேஷனில் செய்யும் தவறுகள், இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன. தற்போதைய காம்பினேஷன் இருதரப்பு தொடர்களில் வெற்றியை கொடுத்தாலும், ஆசியக் கோப்பை, உலகக்கோப்பை போன்ற தொடர்களில் நிச்சயம் பிரச்சினையை கொடுக்கும்.
டாப் 3 பேட்டிங் வரிசையில் உலகின் அதீத திறமையான பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்காக விளையாடினாலும், உலகக்கோப்பை என்பது கனவாக மட்டுமே இருக்கும். ஏனென்றால் மூவரும் ஒரே பாணியிலான கிரிக்கெட் அணுகுமுறையை கொண்டவர்கள். ஆரம்பத்தில் நிதானித்து தேவைக்கேற்ப அதிரடியை கடைபிடிப்பவர்கள். அதிலும் கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் ரிஸ்க் எடுக்க தயாரின்றி, பாதுகாப்பாக ஆட வேண்டும் என்று நினைப்பது டி20 கிரிக்கெட்டுக்கு ஆகாத விஷயம். இவர்கள் மூவரும் டாப் 3 வரிசையில் ஆடுவதுதான் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
பரிசோதனை முயற்சி அவசியம்
இதனால் அதற்கேற்றாற்போல் வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி சில பேட்டிங் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டால் விரைவாக தீர்வை எட்டி, ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போது சரியான திட்டமிடலுடன் செல்ல முடியும். ஆனால் ரோஹித் ஷர்மா - டிராவிட் கூட்டணி என்ன திட்டத்தோடு இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.