ஒருபக்கம் குடிக்கவே கூழ் இல்லை.. இன்னொரு பக்கம் தொழிலதிபர்களின் ரூ70,000 கோடி கடன்கள் தள்ளுபடியாம்!
சென்னை: கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் இனிவரும் நாட்களில் ஏற்படுத்தப் போகிற விளைவுகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த நிலையில் 50 பெரும் தொழிலதிபர்கள் பொதுமக்களின் வங்கிகளில் சூறையாடிய ரூ70,000 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்கிற தகவல் எவ்வளவு பெரிய கொடுமை.
Recommended Video
எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் கொரோனா லாக்டவுன் நாட்டில் அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தனை தொழில்களும் அப்படியே போட்டது போட்டபடி முடங்கிப் போயின.
21 நாட்கள் என்று தொடங்கிய லாக்டவுன் இப்போது 40 நாட்கள் என நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த லாக்டவுன் மே 3-ந் தேதியுடன் முடிவடையும் என்ற போதும் நீட்டிக்கப்படுமா? இல்லையா?
மல்லையா , நீரவ் மோடி உள்பட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி.. ரிசர்வ் வங்கி
எதிர்காலம் என்னவாகும்?
இந்த லாக்டவுன் 40 நாட்கள் துயரம் அல்ல.. இந்த லாக்டவுன் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பு இனி எத்தனை மாதங்கள் நீடிக்குமோ? ஆண்டுகளாய் தொடருமோ? என்பதுதான் அத்தனை குடிமகன்களின் பெரும் கவலை. லாக்டவுனில் சிக்கித் தவிக்கும் கோடிக் கணக்கான மக்கள் அடுத்த வேளை உணவுக்கே உதவி செய்கிறவர்களின் கைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
எதுவுமில்லாத நிலையில்..
மூடப்பட்ட தொழில் நிறுவனங்கள் எப்படி இயல்பு நிலைக்கு திரும்பப் போகிறது என்பது தெரியவில்லை? அரசு உதவுமா? கந்துவட்டிகாரர்களின் காலில் விழ வேண்டுமா? என் நினைத்து நினைத்தே நெஞ்சம் வெடித்துவிடுகிறது இந்த தேசத்தின் குடிமகன்களுக்கு. இந்த அச்சத்தையும் எதிர்கால பயங்கரத்தையும்விட மிக பேரதிர்ச்சியாக இடி போல் வந்து விழுந்திருப்பதுதான் இந்த செய்தி.
தொழிலதிபர்கள் ஏப்பம் விட்ட ரூ70,000 கோடி
50 தொழிலதிபர்களின் ரூ70,000 கோடி வங்கி கடன்களை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்திருக்கிறதாம்.. இந்த 50 பேரும் கூழுக்கு அலைகிற அன்றாடங்காய்ச்சிகள் அல்ல. கும்பிவெடித்து சாகிற அளவுக்கு காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக அக்னி வெயில் வெறும் காலில் நெடுஞ்சாலைகளில் பாத ரத்தங்களை பாயவிட்டவர்கள் அல்ல. தலைமுறைகளுக்கும் சொத்து குவித்து வெளிநாடுகளில் பதுங்கிக் கொண்டு உல்லாச உப்பரிகைகளில் ஒய்யார கும்மாளமிடும் கும்பல்- கைகளில் விலங்குகளை மாட்டி காராகிரகங்களில் அடைக்கப்பட வேண்டிய கிராதகர்கள். இவர்களுக்குத்தான் நமது இந்திய தேசம் கருணை காட்டியுள்ளது.
மனசாட்சியற்ற செயல்
இது கடன் தள்ளுபடி அல்ல.. பொதுமக்களின் பணத்தை திருடிய கொடூரர்களுக்கு இந்த தேசம் அளித்திருக்கும் பாவமன்னிப்பு. மனசாட்சியே இல்லாமல் பணத்திமிங்கலங்களுக்கு சாட்சியாளர்களாய் சரணடைந்த இந்த தள்ளுபடி நடவடிக்கையை எப்படித்தான் நியாயப்படுத்துவார்களோ நியாயவான்கள்? ஏழைகளின் அபயக் குரல் ஒருபோதும் அம்பலம் ஏறாது என்பதற்கான நிகழ் சாட்சி இந்த கடன் தள்ளுபடி!