7 தமிழர் விடுதலை.. மாவோயிஸ்டுகள் திடீர் ஆதரவுக் குரல்.. பின்னணியில் யார்?
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யாமல் இருக்க மாவோயிஸ்டுகள் ஆதரவு என்கிற பெயரில் திடீரென ஒரு நாடகம் அரங்கேற்றப்படுவதாக தமிழார்வலர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.
உச்சநீதிமன்றமே 7 தமிழரை விடுதலை செய்வதை மாநில அரசு முடிவு செய்யலாம் என கூறியது. இதையடுத்து தமிழக அரசும் அமைச்சரவையை கூட்டி 7 தமிழரை விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் கடத்தி வருகிறார். இதனைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்ததாக புகார்.. அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோரால் பரபரப்பு!
டெல்லி பயணம்
இருப்பினும் ஆளுநர் தரப்பில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.
மாவோயிஸ்டுகல் ஆதரவு
இச்சந்திப்பு தொடர்பாக ஊடகங்கள் செய்திகள் வெளியான அதே நேரத்தில் 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி மாவோயிஸ்டுகள் துண்டு பிரசுரம் கொடுத்தனர் என்றும் அவர்களது பேட்டியையும் சில ஊடகங்கள் திடீரென முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.
அரசியல் முத்திரை?
7 தமிழர் பிரச்சனையை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தலைமையிலான போராட்டக் குழுதான் முன்னெடுத்து வருகிறது. இதில் அரசியல் சார்பு இருக்கக் கூடாது என்பதில் அந்த இயக்கங்கள் உறுதியாக உள்ளன. இந்த நிலையில் திடீரென மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் துண்டு பிரசுரம் கொடுப்பதாகவும் அதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதும் ஏன் என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.
தூத்துக்குடியில் 13 பேர் பலி
7 தமிழருக்கும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக கூறி அவர்களை விடுதலை செய்யாமல் தடுப்பதற்கான சதியா இது என்றும் தமிழார்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 அப்பாவிகள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். கடைசியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியதாக கூறப்பட்டது. ரஜினி உள்ளிட்டோரும் அதை ஆமாம் ஆமாம் என்று ஆமோதித்தனர். இப்போதும் அதேபோல் மாவோயிஸ்டுகளின் பெயரால் 7 தமிழரை விடுதலை செய்யாமல் தடுக்க சதி நடைபெறுகிறதா? என்பதுதான் தமிழார்வலர்களின் கேள்வி.