எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ‘வேட்டு’.. ஓபிஎஸ் டீம் போட்ட ‘கோ-வாரண்டோ’.. எடப்பாடிக்கு பெரிய சிக்கல்!
சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி தரப்பு தொடர்ச்சியாக குடைச்சல் கொடுத்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என ஒரே போடாகப் போட்டு வழக்கை தொடர்ந்துள்ளது ஓபிஎஸ் டீம்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அந்தப் பதவியில் இருந்து நீக்கம் செய்து, அவர் இதுவரை பெற்ற ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் சார்பில் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் சொத்து, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை மறைத்து, தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் என்பவர், கோ வாரண்டோ வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் சொத்துக்களையும், கல்வித் தகுதியையும் மறைத்த செயல் தவறான நடத்தை மட்டுமல்லாமல், ஊழல் நடவடிக்கையும் கூட. வேட்பு மனுவில் சொத்துகள் குறித்த விவரங்களை மறைத்ததுடன், எம்.எல்.ஏ.வாக பெற்ற ஊதியத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.
சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியுள்ளார்.
மேலும், எந்த தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடுவதுடன், அவரை பதவி நீக்கம் செய்து, அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவரது மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications