வன்னியர்களுக்கு திமுக துரோகம் செய்தது என்றால்... எதற்காக கூட்டணி வைத்தார் ராமதாஸ்? -R.s.பாரதி கேள்வி
சென்னை: வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் திமுக துரோகம் செய்தது என்றால் எதற்காக தங்களுடன் ராமதாஸ் கூட்டணி வைத்துக் கொண்டார் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வினவியுள்ளார்.
வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த பலரும் திமுகவில் தங்களை இணைத்து வருவதால் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் அவதூறு பரப்புவதாக ராமதாஸை சாடியுள்ளார் பாரதி.
மேலும், 10 ஆண்டு காலமாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பேசாமல் இப்போது தேர்தல் வருவதால் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்னெடுத்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
வன்னியர் சமுதாயம்
வன்னியர் சமுதாயத்திற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்காக பாமக சார்பில் ஏற்கனவே பெரியளவில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. மேலும், சி.ஆர்.ராஜன் என்பவர் தனது அமைப்பு சார்பில் இம்மாதம் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவிருக்கிறார்.
அதிமுகவுடன் கூட்டணி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமக இந்தக் கோரிக்கையில் உறுதியாக நிற்கிறது. இதனால் இன்னும் அதிமுகவுடன் கூட்டணி விவகாரம் கூட இறுதியாகவில்லை. இந்த சூழலில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிப்பதில் திமுக துரோகம் செய்ததாக ராமதாஸ் கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள திமுக எம்.பி.ஆர்.எஸ்.பாரதி, நாங்கள் துரோகம் செய்தோம் என்றால் ராமதாஸ் எதற்கு கடந்த 2011 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தார் என வினவியுள்ளார்.
ராமதாஸ் அவதூறு
மேலும், இத்தனை மாதங்களாக விட்டுவிட்டு தேர்தல் வருவதால் இப்போது இட ஒதுக்கீடு முழக்கத்தை ராமதாஸ் முன் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். வன்னியர் சமுதாய பெருமக்களின் வாக்குகளும், ஆதரவும் திமுகவை நோக்கி வருவதால் அந்த அச்சத்தில் அவதூறு பரப்பி வருவதாக ராமதாஸை விமர்சித்தார்.
கட்சியினர் எதிர்பார்ப்பு
இதனிடையே தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாமக என்ன நிலைப்பாடு எடுக்கவிருக்கிறது என்பதை ஒட்டுமொத்த அரசியல் களமும் கவனித்து வருகிறது. இதேபோல் இட ஒதுக்கீடு விவகாரத்திலும் பாமகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.