80: 20 கணக்கில் வைத்தியம்.. ஏழைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த ரமணி.. யார் இவர்?
சென்னை: கோவையை சேர்ந்த மருத்துவர் ஆர் வி ரமணிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. யார் இந்த ராமநாதன் வி ரமணி?
குடியரசு தினவிழாவையொட்டி ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி நேற்றைய தினமும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலை, மருத்துவம், ஆன்மீகம் உள்ளிட்ட துறைகளில் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.
யார் இந்த ரமணி
கோவைச் சேர்ந்த மருத்துவர் ஆ வி ரமணிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. யார் இவர் என்பதையும் இவர் செய்த சாதனைகளையும் பார்ப்போம்.
கண் மருத்துவமனை
டாக்டர் ஆர்விஆர் என அன்போடு அழைக்கப்படுவர் ரமணி. இவர் சங்கரா கண் அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவராவார். இந்த அறக்கட்டளையின் கீழ் சங்கரா கண் மருத்துவமனை இயங்கி வருகிறது.
சிறந்த மாணவர்
கண் மருத்துவரான ரமணியின் சங்கரா கண் மருத்துவமனை நாட்டின் முக்கிய கண் பாதுகாப்பு மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்கிறது. கஸ்தூர்பா மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்ற இவர் அங்கு சிறப்பான மாணவராக திகழ்ந்தார்.
சங்கரா மருத்துவமனை
இவர் காஞ்சி காமகோடி மருத்துவ மையம் என்ற கிளீனிக்கை கடந்த 1947-ஆம் ஆண்டு கோவையில் தொடங்கினார். நோயாளியிடம் இருந்து 50 பைசாவை பெற்றுக் கொண்டு மருத்துவம் பார்த்தார். பின்னர் படிப்படியாக முன்னேறி கடந்த 1985-ஆம் ஆண்டு சங்கரா கண் அறக்கட்டளையை தொடங்கினார்.
இலவசம்
சங்கரா கண் அறக்கட்டளையின் கீழ் இந்தியா முழுவதும் கோவை, பெங்களூரு, குண்டூர், சிமோகா, லூதியானா, விஜயவாடா ஆகிய 6 இடங்களில் 10 மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனையில் கிராமப்புறங்களில் இருந்து வரும் நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்கு இலவசமாக வைத்தியம் பார்க்கப்படுகிறது. அதோடு அறுவை சிகிச்சைகளும் இலவசமாகும். மீதம் 20 சதவீதம் பணக்காரர்களுக்கு வைத்தியம் பார்க்கப்படுகிறது.
விருதுகள்
மருத்துவத் துறையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு கண்ணுக்கு ஒளியை தரும் ரமணி இதுவரை பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இதில் முக்கியமானவையாக சென்னை கேஎம்சி அமைப்புகளின் வாழ்நாள் சாதனையாளர் விருது, வேதா வியாசா சபா அறக்கட்டளையின் வைத்திய ரத்னா விருது, அடிப்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் இந்தியாவின் ரோல்மாடல் விருது, கண் மருத்துவத் துறையின் சார்பில் டாக்டர் ஜி வெங்கடசாமி நினைவு விருது, கோவை மக்களால் நேத்ர நேட்டா என்ற விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.