ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு.. ரிசல்ட்டே மாறலாம்
Recommended Video
சென்னை: ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் ஓட்டுக்கள் மற்றும் இறுதி சுற்று வாக்குகளை மறுபடி எண்ணும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அங்கு தேர்தல் முடிவே மாறும் நிலை உருவாகியுள்ளது.
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நெல்லை மாவட்டத்திலுள்ள ராதாபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தல் முடிவுகளில் இன்பதுரை 69590 வாக்குகளை பெற்றார். அப்பாவு 69541 வாக்குகளை பெற்றார். வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில், இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் 203 தபால் ஓட்டுகளை செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்ததை எதிர்த்த அப்பாவு, அந்த வாக்குகளை எண்ண வேண்டும் என்று அப்பாவு கோரிக்கை விடுத்தார். ஆனால், இதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. அதை மீறி தர்ணாவில் ஈடுபட்ட அப்பாவு, காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினரால் அங்கேயிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து இன்பதுரை வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அப்பாவு. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் வழக்கு நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 203 தபால் ஓட்டுக்களை எண்ண, வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் 19, 20, 21 என்ற மூன்று சுற்றுகளிலும் வாக்கு எண்ணிக்கையில் தவறு நடந்ததாக முறையிடப்பட்டதையும் பரிசீலித்த நீதிமன்றம், இந்த மூன்று சுற்றுகளின் வாக்கு இந்திரங்களை வரும் 4ம் தேதிக்குள் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.
வாக்குகள் எவ்வளவு நேரத்தில் எண்ணி முடிக்கப்படும் என்று இன்றே தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வாக்குகள் எண்ணப்படும்பட்சத்தில் ஒருவேளை இன்பதுரையைவிட, அப்பாவு மொத்தத்தில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.